‘மகளிர் உரிமைத் தொகை’ போலவே ரூ.8 ஆயிரம் ‘இல்லத்தரசி கூப்பன்’ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது! – அமைச்சர் கீதா ஜீவன்

3 Min Read

சென்னை, ஏப்.6- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ரூ.8 ஆயிரம் இல்லத்தரசி கூப்பன்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல் போட்டால், ‘இல்லத்தரசி’ என்ற திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் வாக்குறுதிதான் முன்னிலையில் நிற்கும்! தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில், இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான வாஷிங் மிஷின், டிவி, கிரைண்டர், பிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ முடியும்.

வீட்டு உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்தான், ‘இல்லத்தரசி’ திட்டத்தின் ஹைலைட்! முந்தைய காலங்களில் அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்ற ஒரே மாதிரியான பொருளாக இல்லாமல், கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் வாங்க முடியும். ‘உரிமைத் தொகை’ என்ற சொல்லை அளித்த மு.க.ஸ்டாலின் அரசுதான், 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தில் விரும்பிய பொருட்களை வாங்கும் ‘உரிமை’யையும் வாக்குறுதியாகக் கொடுத் திருக்கிறது.

‘எங்காவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போட்டிருக்கிறார்களா?’ என வீட்டு உபயோகக் கடைகளைப் பார்வையிடும் மற்றவர்களிடம் கேட்கும் பெண்களின் மனதிற்குள் இருக்கும் ஏக்கத்தை எத்தனை பேர் அறிவார்கள்? வீட்டில் மக்கர் பண்ணிக் கொண்டிருக்கிற பழைய மின்சாதனப் பொருளை மாற்ற ஒரு வசதி வராதா? என ஏங்கும் எத்தனையோ லட்சம் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பொருள் அவர்கள் வீட்டுக்குள் வந்தால், அது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு வரம் மட்டுமல்ல. வர்க்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! அதனை உணர்ந்துதான் பழைய பொருட்களை மாற்றும் அம்சத்தையும் இந்தத் திட்டத்தில் சேர்த்தது தி.மு.க. பழைய வீட்டு உபயோகப் பொருட்களைக் கடைகளில் கொடுத்துவிட்டு, கூப்பனைப் பயன்படுத்தி புதிய மாடல் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டுப் புதியவற்றை வாங்கிக் கொள்ளும் வசதியால், பழைய பொருட்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் உள்ளூர் வணிகமும் இன்னொரு பக்கம் புத்துயிர் பெறும்.

விற்பனை அதிகரிக்கும்!

சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பயன் அளிப்பதால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள், தங்கள் வீட்டுத் தேவைகளுக்காகச் செய்யும் செலவில் இருந்து நிம்மதி பெறுவார்கள். அவர்களின் பொருளாதாரச் சுமை குறையும். பெண்களின் வாங்கு திறனை (Purchasing power) அதிகரித்து சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நலத்திட்டங்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணும்!

இது வெறுமனே ‘இல்லத்தரசி’ கூப்பன் திட்டம்’ மட்டுமல்ல. உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணியாகவும் (Smart Economic Multiplier) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ’உள்ளூர் வணிகம் – இல்லத்தரசிகளின் தேவை’ என இரு தரப்பையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும். இந்தத் திட்டத்தில் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கும்போது உள்ளூர் சிறு மற்றும் குறு வணிகர்களின் விற்பனை அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை பெரிய காப்ரேட் நிறுவனங்களில் அரசு ஒப்பந்தம் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டன. ‘இல்லத்தரசி’ கூப்பன் திட்டம்’ பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதில் உள்ளூர் வணிகர் களின் விற்பனையை நேரடியாக அதிகரிக்கும். பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, நலிவடைந்த சிறு மின்சாதனக் கடைகளுக்குப் பெரிய அளவில் புத்துயிர் கிடைக்கும்!

சுமார் 2 கோடி குடும்பங்கள் இந்த கூப்பன்களை பயன்படுத்தும்போது சிறு மற்றும் நடுத்தர மின்சாதனம் மற்றும் வீட்டு உபயோகக் கடைகளில் விற்பனை பெருமளவில் அதிகரிக்கும். அதனால், உள்ளூர் வணிகர்கள் புதிய ‘ஆஃபர்’களை வழங்குவார்கள். 2 கோடி குடும்பங்களும் இந்த கூப்பன்களை பயன்படுத்தும் போது சிறிய மற்றும் நடுத்தரக் கடைகளில் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். அதனால், சந்தையில் பணப்புழக்கம் உயர்ந்து, அது பொருளாதாரத்தை வேகப்படுத்தும்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *