இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டாமா? பெரியார் மண்ணில் நீங்கள் ஓட்டுக் கேட்க உரிமை உண்டா?

மதுரை மாநாட்டு முகப்பில் பெரியார் படம் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. சொன்னதைக் கேட்டு, பெரியார் படத்தை எடுத்துவிட்டு, தாமரையை வைத்தீர்களே!
உங்களைவிட சர்வ அடிமைகள் இந்த நாட்டிலே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்!
அ.தி.மு.க.வினரை நோக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!

சென்னை, ஏப்.5 மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிரதமர் மோடி வருவதற்கு முதல் நாள், பெரியார் படத்தை மாநாட்டு மேடையின் முகப்பில் வைத்தார்கள். ‘‘பெரியார் படம் அங்கே இருக்கக்கூடாது என்று பா.ஜ.க.விடமிருந்து தாக்கீது வருகிறது. உடனே ‘‘பெரியாரை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம், நீங்கள் வாருங்கள்’’ என்று சொல்லி, அந்த இடத்தில் தாமரையை வைத்தீர்களே, உங்களைவிட சர்வ அடிமைகள் இந்த நாட்டிலே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டாமா? பெரியார் மண்ணில் நீங்கள் ஓட்டுக் கேட்க உரிமை உண்டா? என்று அ.தி.மு.க.வினரை நோக்கி வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்.

Contents

‘தி.மு.க. திராவிட மாடல் 2.0’ தேர்தல் அறிக்கையும்,
பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்!

3.4.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தி.மு.க. திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆரியர்களின் தலைவராக இருந்து, அவர்களை வழிநடத்தக் கூடிய ஒரு பத்திரிகையை நடத்தி வந்த அக்கிரகாரத்து நண்பர்  ‘சோ’ ஒருமுறை என்னிடம் கேட்டார்,

தேசிய கட்சிகளுக்கு
தமிழ்நாட்டில் இடமே இல்லையா? – சோ!

‘‘என்னங்க, தமிழ்நாட்டைப் பங்குப் போட்டுக் கொள்ள, மாறி மாறி இவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டுமா? மற்ற தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லையா?’’ என்று.

தேசியம் என்பது வெறும் பார்ப்பனியம் என்று நினைக்க இடமிருக்கின்ற வரையில், என்றைக்கும் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு இடமே இருக்காது.

ஆகவேதான், சில பேர் இப்போது  ‘டூப்ளிகேட் தேசியத்தை’ப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகவே, அதற்கு இடமில்லாத சூழ்நிலையில், இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதற்கு அடித்தளம், எங்களுடைய ஆட்சியில், இதை இதை செய்திருக்கிறோம் என்று சொல்லும்போது, அதை விரிவாக்குவதற்கு, அதைத் தெளிவாக்குவதற்கு, இன்னும் நிரப்பப்பட வேண்டியதை நிரப்புவதற்கு எல்லா சாதனைச் செயல்களையும் செய்திருக்கிறார், செய்யவிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஒரு சாதனையைச் செய்து முடித்தவுடனே, இன்னொரு சாதனை!

இன்னுங்கேட்டால், ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய பெருமையைச் சொல்லவேண்டு மானால், அதனுடைய சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கே நேரமிருக்காது. ஒரு சாதனையைச் செய்து முடித்தவுடனே, இன்னொரு சாதனை!

இவை அத்தனைக்கும் எது அடிப்படை என்றால், சுயமரியாதை இயக்கம், பெரியார் கொள்கை.

பெரியார் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்காகத்தான், அண்ணா அவர்கள் அரசியல் பிரிவைத் தொடங்கினார். அண்ணா அவர்கள் அதனைத் தொடங்கி வைத்தார். அதனை சரியான கட்டுமானமாக, கலைஞர் நடத்தி வைத்தார். கலைஞரின் கட்டுமானத்தை, இன்னும் உறுதியாக்கியது மட்டுமல்ல, அதை விரிவாக்கி, இருக்கக்கூடிய கட்டுமானத்தைப் பெரியதாக்கி ஸ்டாலின் செய்து வருகிறார். அதனால்தான், ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எல்லவற்றையும்விட எதிரிகளை உலுக்கிக் கொண்டிருப்பது, ஏன்? ‘பிராமணர் சங்கம்’ உள்பட மற்றவர்கள் என்ன செய்தாலும், அவருக்கு எந்த வெறுப்பும் இல்லை.

எல்லோருடைய பெயரையும் பொது இடங்களுக்கு வைத்திருக்கிறார்கள். பதவி கொடுக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். கிளைக் கழகங்களாக இருக்கக்கூடிய கோயில்களைக்கூட அவர் வேறுவிதமாகப் பார்க்க வில்லை.

இவற்றை எதிர்க்கவேண்டும் என்றால், திராவிடர் கழகத்திற்கு வேண்டுமானால் காரணம் இருக்கிறதே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது.

வாக்களித்தவர்களுக்கும் முதலமைச்சர், வாக்களிக்காதவர்களுக்கும் முதலமைச்சர் என்றார்!

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது எல்லோ ருக்குமான ஆட்சியாகத்தான் இருக்கிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போதே அவர் சொன்னார், ‘‘நான் வாக்களித்தவர்களுக்கும் முதலமைச்சர், வாக்களிக்காதவர்களுக்கும் முதலமைச்சர். எல்லோருக்கும் நன்மை செய்வேன்’’ என்று. அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் கடந்த 5 ஆண்டு காலத்தில்.

எனவே, அடுத்த 5 ஆண்டு காலத்தில், இன்னும் பெரிய மாளிகையாக, மக்களுக்குப் பயன்படக் கூடியதாக ஆகவேண்டும் என்கிற திட்டம்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையாகும்.

பெரியாருடைய பிறந்த நாள்
சமூகநீதி நாள்!

ஆரிய ஏகாதிபத்தியத்தின் சங்கடம் என்ன? நம்முடைய மக்கள்  படிக்கிறார்களே என்பதுதான். சமூகநீதிக்கு பெரியார் சொன்ன விளக்கத்தை, தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை, ‘‘சமூகநீதி நாளாக’’ அறிவித்து, அன்றைக்கு அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடக் கூடிய விழாவாக ஆக்கினார்.

அதேபோல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை, ‘‘சமத்துவ நாளாக’’ அறிவித்து, உறுதிமொழி எடுக்கச் செய்தார்.

உறுதிமொழி!

தந்தை பெரியார் பிறந்த நாளின்போது எடுக்கப்படும் உறுதிமொழி,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனது என்ற பண்பு நெறியும் வாழ்வியலில் கடைப்பிடிப்பேன்!

வழிமுறையாகச் சுயமரியாதை, பகுத்தறிவு, ஆளுமைத்திறனும், கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதற்கும், ‘‘அனைவருக்கும் அனைத்தும் கிடையாது, எங்க ளுக்குத்தான் எல்லாம், எங்களுக்குத்தான் ஏகபோகம்’’ என்று சொல்வதற்கும் ஏற்பட்டு இருக்கின்ற போராட்டம்தான் இந்தத் தேர்தல்.

மனுதர்மத்தை அரசியலமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, சிக்கலான நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கியபோது, ‘‘அந்த அரசியலமைப்புச் சட்டத்தை எங்களால் ஏற்க முடியாது. எங்களுக்கு மனுதர்மத்தை அரசியலமைப்புச் சட்டமாக்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை உடைப்பதுதான் எங்களுடைய வேலை’’ என்று, நேற்றுவரை – இன்றுவரை செய்துகொண்டு இருக்கிறது ஒன்றிய மோடி ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி.

மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி

அதனால்தான், ஒத்தக் கருத்துள்ளவர்கள், ஒத்தக் கொள்கை உடையவர்கள் எல்லாம் சேர்ந்து நம்முடைய கூட்டணிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று.

அதனால்தான், எத்தனை இடங்கள் கிடைத்தன என்பது எங்களுக்கு முக்கியமல்ல; எந்தக் கொள்கைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்ற அடிப்படையில்தான், இந்தக் கட்டுமானம் உருவாகி, இன்றைக்கு மக்கள் மத்தியிலே நிற்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியதுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கையாகும்.

மோடியானாலும், அமித்ஷாவானாலும், அவர்க ளிடையே தங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்களே, அடமானப் பத்திரத்தைக் கொடுத்துவிட்டார்கள் அல்லவா – அப்படி அ.தி.மு.க. என்று பெயரளவில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சியாகத்தான் இருக்கும்; தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்று பா.ஜ.க.வினர் சொன்னாலும், அதையும் ஏற்றுக்கொண்டு, சங்கடப்படாமல் தங்களுடைய அடிமைத்தனத்திற்கு அவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்களே, அப்படிப்பட்ட பொம்மலாட்ட அரசியலுக்குப் பலியாகி இருக்கிறார்களே, அவர்கள் உள்பட தெளிவாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

‘‘அடிமையா? நாங்களா, அடிமையா? யார் அடிமை?’’ என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார். யார்? எடப்பாடி….யார்! என்று சொல்லக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்.

இதுவரை எடப்பாடியார் என்று சேர்த்துச் சொல்கி றார்கள்; மே 5 ஆம் தேதிக்குப் பிறகு, எடப்பாடி–  யார்? என்ற கேள்வியை கேட்கும்படியாக, அமித்ஷா செய்வார், மோடி செய்வார்.

ஏனென்றால், இப்பொழுதே அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரளவில்கூட அவர்களை அடையாளப்படுத்திச் சொல்வதில்லை.

நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில்
அவர்கள்மீது கோபம் கிடையாது!

‘‘நாங்கள் அடிமைகளா?’’ என்று கேட்கிறார்கள். நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் அவர்கள்மீது கோபம் கிடையாது. வேதனைதான். அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கத்தினுடைய மூல வேர் என்ற ஒரு தாய்க்கழகமாக – பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய இந்த இயக்கத்திற்கு ஒரு பெரிய மனச்சங்கடம் என்னவென்று சொன்னால், அடிமைகளாக தங்களை விற்றுக்கொள்கிறார்களே என்பதை நினைத்துத்தான்.

ஒரு காலத்தில், டில்லி, தமிழ்நாட்டிற்கு வந்தது. ஆனால், இன்றைக்கு, ஒரு பட்டியலைக் கொடுப்பதற்குக்கூட, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக்கூட, யார் என்று சொல்வதற்குக்கூட, டில்லிக்குச் சென்று பேசக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

இது வெளிப்படையாக எல்லோரும் தெரிந்த ஒன்றுதான். இல்லை, இல்லை, அப்படியெல்லாம் இல்லை என்று காட்டுவதற்காக, நீங்கள் இடத்தை மாற்றலாம்.

திராவிடர் கழகத்தின் சார்பில்
ஒரே ஒரு கேள்வி!

ஆனால், ஒரே ஒரு கேள்வி. நீங்கள் அடிமைகளா, இல்லையா? என்பதற்கு, திராவிடர் கழகத்தின் சார்பில், நான் ஒரு கேள்வியை, அ.தி.மு.க.வினுடைய பொதுச்செயலாளரிடம் கேட்க விரும்புவது, ‘‘சென்ற முறை மதுரைக்குப் பிரதமர் மோடி வருவதற்கு முதல் நாள், பெரியார் படத்தை மாநாட்டு மேடையின் முகப்பில் வைத்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால், பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்; பெரியார் சிலைக்கு மாலை போடுவார்கள். ‘பெரியார் பெயரில் விருதுகளையும் அந்த அம்மையார் இருக்கும்போது உருவாக்கினார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்தில், ‘‘கடைசி வரைக்கும் உங்களுடைய கொள்கையிலிருந்து நான் மாறமாட்டேன்’’ என்று உறுதியளித்தவர்.

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், எல்லா இயக்கத்தாலும் மதிக்கப்படக்கூடிய, கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று, எல்லாக் கட்சிகளாலும் மதிக்கப்படக்கூடிய, தமிழ்நாட்டிற்கு அடித்தளமாக, இன்றைக்கு நாம் மானத்தோடும், அறிவோடும், தெளிவோடு வாழ்வதற்கும், கல்வி உரிமைகளைப் பெற்றதற்கும் ஒரே ஒருவர் காரணம் என்றால், அவர் தந்தை பெரியார்தான் என்பதில், இரு வேறு கருத்துகள் கிடையாது.

ஏதோ சில கூலிப் பட்டாளங்களின் பைத்தியக்கா ரர்களின் உளறல்களைத் தவிர, வேறு கருத்துகள் இருக்க முடியாது. அந்தப் பெரியார் படத்தை மாநாட்டு மேடை முகப்பில் வைக்கிறார்கள்.

உடனே தாக்கீது வருகிறது, எங்கே இருந்து?  பா.ஜ.க. விடமிருந்து, ‘‘பெரியார் படம் அங்கே இருக்கக்கூடாது. அதைத் தூக்கிக் கீழே போடுங்கள். பிரதமர் மோடி வருகிறார்’’ என்று.

பெரியாருடைய நூற்றாண்டு விழா –
அஞ்சல் தலை வெளியீடு!

ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும்போதுதான், பெரியாருடைய நூற்றாண்டு விழாவில், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவையெல்லாம் வரலாறு.

யார் தலைவர் தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக்கு? அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைவராக இருந்தால், என்ன செய்திருக்கவேண்டும்?

நீங்கள் முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்தால், என்ன செய்திருக்கவேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும் அவர்கள்.

‘‘பெரியாரை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம், நீங்கள் வாருங்கள் என்று சொல்லி, அந்த இடத்தில் தாமரையை வைத்தீர்கள்.’’

உங்களைவிட ‘சர்வ அடிமைகள்’ இந்த நாட்டிலே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டாமா? பெரியார் மண்ணில் நீங்கள் ஓட்டுக் கேட்க உரிமை உண்டா? என்று எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் அடிமைகள் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இதுதான்!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *