ஆப்கனில் கனமழைக்கு 77 பேர் பலி

2 Min Read

காபூல், ஏப். 5- ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்த புயல், கனமழை, நிலச்சரிவால் இதுவரை 77 பேர் உயிரிழந்ததாகவும், 137 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. காபூலை பல்வேறு மாகாணங்களுடன் இணைக்கும் பல நெடுஞ்சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளது. இதனால் காபூல் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்கனுடன் இணைக்கும் காபூல்- ஜலால்பாத் நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில்
கல்லூரி விளையாட்டுகளை
கட்டுப்படுத்த புதிய உத்தரவு

வாசிங்டன், ஏப். 5- அமெரிக்க அதிபராக 2ஆவது முறையாக பதவியேற்ற பிறகு டிரம்ப் பல்வேறு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது கல்லூரி விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் புதிய உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கல்லூரி விளையாட்டு வீரர்கள் அய்ந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 5 சீசன்கள் மட்டுமே விளையாட முடியும். மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன், ஒரு முறை மட்டுமே இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிகளை மீறும் பல்கலைக்கழகங்கள் கூட்டாட்சி நிதியை இழக்க நேரிடும்.

 

ஈரானில் 35 நாட்களாக சிக்கியிருந்த
72 குஜராத் மீனவர்கள்
அர்மீனியா செல்ல அனுமதி

டெஹ்ரான், ஏப். 5- ஈரானில் சிக்கியிருந்த 72 குஜராத் மீனவர்கள் அர்மீனியா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரானின் கிஷ் தீவில் குஜராத்தைச் சேர்ந்த 72 மீனவர்கள் கடந்த 35 நாட்களாக சிக்கி இருந்தனர். இது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. மோதல் தீவிரமடைந்த போது, தங்களது பாதுகாப்புக்காகப் பல மீனவர்கள் படகுகளிலேயே முடங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவர்கள் ஈரானிய அதிகாரிகளை அணுகி வெளியேற அனுமதி கோரினர். இதனைத் தொடர்ந்து, சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்மீனியாவுக்குச் செல்ல 20 நாட்களுக்கான விசா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை வரியாகப் பயணத்தைத் தொடங்கினர்.

மீனவர்கள் பகிர்ந்துள்ள காணொலிகளில், அங்குள்ள மோசமான சூழலை விவரித்துள்ளனர். நீண்ட காலப் போர் தங்களுக்கு மன உளைச்சலையும், கடும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் கையிருப்பில் இருந்த பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும், இந்தியாவுக்குத் திரும்புவதற்கான விமானச் செலவுக்குப் பணம் இல்லை என்றும் அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

அர்மீனியாவில் இருந்து தங்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய அரசு உதவ வேண்டும் என்றும், துபாய் வழியாகத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய தகவல்களின்படி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் அர்மீனியாவில் தங்கி இந்தியாவுக்கு வரக் காத்திருக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *