நூல் அறிமுகம்

நூலின் பெயர்: “ஆங்கிலேயர் கால மதுரை”

ஆசிரியர்: அருணன்

முதற்பதிப்பு: மார்ச் 2026   பக்கம்: 240

 தலைப்புகள்: 38   விலை: ரூ.250/-

நூலின் முதல் தலைப்பிற்கு “ஆங்கிலேயர் கைப்பற்றிய போது…” என்று பெயிரிட்டு எழுதியிருக்கக் கூடிய நூலாசிரியர் அருணன் அவர்கள் நூலின் கடைசித் தலைப்பிற்கு, “சினிமாக்காரர்கள்” எனப் பெயரிட்டு, இன்றைக்கு நாம் காணும் மதுரையை எழுத்தோவியமாய்த் தீட்டி திறம்படக் காட்டியிருக்கிறார்.

ஆங்கிலேயர்களின் பார்வையில் தொடக்கத்தில், “காட்டுமிராண்டிப் பழங்குடியினராக” தெரிந்திட்ட மக்கள் அவர்கள் காலத்திலேயே எழுந்து – உயர்ந்து நின்றனர் என்பது சரித்திர வினோதமே! என்று நூலாசிரியர் வியக்கிறார்.

மதுரையைச் சுற்றியிருந்த கோட்டை அழிந்து, அதோடு அகழியும் அழிந்து அழகு மதுரை உருவான வரலாறும், பாலம் அமைத்து இரயில் விட்டதும், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேற்ற எண்ணிய ஆங்கிலேயர்களை மதவெறியர்கள் நிறைவேற்றவிடாது தடுத்தாண்டதும் இந்நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் போய் ஜமீன்தார்கள் வந்த கதை, திராவிட வாழ்வு என்று கூறும் பழக்கம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே வந்திட்ட வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செட்டியார் வாழ்வு தொடங்கி பஞ்சமர் வாழ்வு வரை விளக்கப்பட்டுள்ளது. ஊர்களில் மூன்று கிணறுகள் வெட்டப்பட்டு, ஒன்று பார்ப்பனர்க்கு, மற்றொன்று சூத்திரர்க்கு, மூன்றாவது பஞ்சமர்க்கு என்று இருந்தது என்பதை நூலாசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

மதுரையில் அன்றிருந்த உயர்நிலைப் பள்ளிகள் 12 மட்டுமே. ஆங்கிலேயர் துவக்கிய முதல் கல்லூரி, “அமெரிக்கன் கல்லூரி” என்ற செய்தியை பதிவிட்டுள்ளார். பல்வேறு கல்லூரிகள் – நிறுவனங்கள் உருவான வரலாறு இடம் பெற்றுள்ளது.

மதுரையில் தோன்றிய ஹார்வி மில், மீனாட்சி மில், மகாலட்சுமி மில், மதுரை பனியன் மில் என இன்றைய தொழில் துறையின் முன்னேற்றத்திற்கான வேர்களை அடையாளமாய்க் காட்டியுள்ளார்.

திராவிடர் இயக்கம் – நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் குறித்துக் குறிப்பிட்டு, கருப்புச் சட்டை மாநாட்டுச் சிறப்பு, விளைவுகளை தெளிவுற எழுதியுள்ளார். ஆலய நுழைவு ஸநாதனிகள் எதிர்ப்பு, ரேகைச் சட்டம் குறித்தும் – அதனால் பார்ப்பனரல்லாதார் மீது சுமத்தப்பட்ட இழிவுகளையும் எழுதியுள்ளார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பால்  1939இல் மீனாட்சி அம்மன் கோயில் நாடார்களுக்கும், பஞ்சமர்களுக்கும் திறந்துவிடப்பட்டதை சிறப்புடன் பதிவிட்டுள்ளார்.

‘நான் ஏன் நாத்திகன்?’, ‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் – ஏன்?’ என்று குடிஅரசில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம் – அதன் தாக்கத்தின் விளைவு குறித்து அவரது பார்வையை பதிவிட்டுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், இசைவாணர்கள், படத் தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என பொருண்மைகளில் அக்கால – இக்கால மதுரையை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

நூலில் நிறைவாக குறிப்பிடுகையில் இப்படிக் குறிப்பிடுகிறார். “ஆங்கிலேயர் கால மதுரை ஒலிபெருக்கி, ரேடியோ, கிராமபோன், சினிமா எனும் கலைத் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு கிறங்கிப் போயிருந்த அன்றை மதுரை – இன்றைய காலத்து தொலைக்காட்சி, இணையம், கணினி போன்ற பல்லாயிர வளர்ச்சியோடு மதுரையும் சேர்ந்து ஓடுகிறது.” என்கிறார். இந்நூல் ஆங்கிலேயர் காலத்தில் மதுரையின் அசுர வளர்ச்சியைக் காட்டும் காலக் கண்ணாடி ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *