பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் (1.4.1972)
பாவலர் பாலசுந்தரம் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளிகள் பட்டியலில் மிக முக்கியமான பன்முகத் திறன் மிக்கவராவார். எழுத்து, பேச்சு, இயக்கம் என இடையறாது வாழ்நாள் பணியாற்றிய தொண்டறச் செம்மல். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு முறை சிறை சென்றவர். அவரது வாழ்விணையர் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களும் அவரையொத்த போராளியாக விளங்கிய திராவிடர் இயக்க வீராங்கனையாவார். தமிழ்நாட்டை பகுத்தறிவுப் பாதையில் மிக வேகமாக சிந்திக்கத் தூண்டிய பராசக்தி திரைப்படத்தின் மூலக்கதை இவருடையது. இதத்தனைச் சிறப்புக்கும் உரிய சுயமரியாதைச் சுடரொளி பாவலர் பாலசுந்தரம் அவர்கள் மறைந்த நாள் தான் 1.4.1972.
வாழ்க பாவலர் பாலசுந்தரம்!
– – – – –
சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் (1.4.1921)
உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தொடக்கத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்காதுதான் இருந்தது. பல்லாண்டுகளுக்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
உலகில் நியூசிலாந்து நாடுதான் பெண்களுக்கு முதன்முதல் வாக்களிக்க உரிமை வழங்கிய நாடு எனும் பெருமைக்குரியதாகும். 1893இல் நியூசிலாந்து நாடு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி சட்டம் நிறைவேற்றியது. அமெரிக்கா கூட 1930இல் தான் வழங்கியது. ஆனால் இந்தியாவில் உள்ள சென்னை இராஜதானியில் 1921இல் ஏப்ரல் முதல் தேதி பெண்களுக்கான வாக்குரிமை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வரப்பட்டது. அன்றைய நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் இது நிறைவேற்றப்பட்டது.
