சென்னை, மார்ச் 30- த.வெ.க.வினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் த.வெ.க.வினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
த.வெ.க. கட்சியைச் சேர்ந்த பெண்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி த.வெ.க. தலைவர் விஜய் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், த.வெ.க.வினர் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பொன்ராஜ் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில், விஜய்யை எதிர்ப்பவர்களை அவதூறு செய்து, சமூக ஊடங்களில் அவர்களின் புகழை அரசியல் ரீதியாக களங்கப்படுத்தி, அவர்களது சொந்த குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் சமூக வலைதள விமர்சகர்கள் குறித்து அவர் ஒருபோதும் கண்டிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் கால் சென்டர் மூலம் கொலை முயற்சி மிரட்டல் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும் புகார் அளித்துள்ளார். ரவுடி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் பொன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
