சென்னை, மார்ச் 30- 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ’ என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தேர்தல் அறிக்கை ‘ஹீரோ மற்றும் ஹீரோயின்’ இணைந்தது போன்ற ஒரு முழுமையான பலம் வாய்ந்த ஆவணம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (29.3.2026) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், வரவிருக்கும் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் மற்றும் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இல்லத்தரசிகளுக்கு…
வருமான வரி செலுத்தாத சுமார் 2 கோடி இல்லத்தரசி களுக்குக் கூப்பன் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். “பணம் கொடுப்பதற்குப் பதிலாக, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே தேர்வு செய்து வாங்கும் வகையில் இந்தக் கூப்பன் திட்டம் அமையும். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்றவற்றைச் சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளோம். எனவே, இந்த வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று அவர் உறுதியளித்தார்.
மாநில உரிமைகள் மற்றும்
மொழிக் கொள்கை
ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக தொடர்ந்து போராடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருமொழிக் கொள்கை: ‘ஒரே நாடு ஒரே மொழி’ திட்டத்தைக் கைவிட்டு, ஆங்கிலம் மற்றும் தாய்மொழி கொண்ட இருமொழிக் கொள்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும்.
மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
கல்வி மற்றும் சமூக நீதி
நீட் ரத்து: மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் (நீட்) அனைத்தையும் ரத்து செய்ய திமுக அழுத்தம் கொடுக்கும்.
புதிய கல்விக் கொள்கை: இந்தித் திணிப்பை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
இடஒதுக்கீடு: அய்.அய்.டி, எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவர வலியுறுத்தப்படும்.
குழந்தைகள் மற்றும் காவலர் நலன்
குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கூடுதல் போக்சோ (POCSO) நீதிமன்றங்கள் அமைக்கப்படும். குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர் நலன்: ஓய்வுபெற்ற காவல் துறையினருக்காகத் தனி நலவாரியம் அமைக்கப்படும். காவலர் குடியிருப்புகள் புதுப்பிக்கப்பட்டு, பதவி உயர்வுகள் காலதாமதமின்றி வழங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
