சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 மய்யங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று (28.3.2026) நடைபெற்றன. சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபட சுமார் 19,594 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சியை தேர்தல் மண்டல அலுவலர்கள் நேற்று வழங்கினர்.
கொளத்தூர் தொகுதி: இத்தொகுதியைச் சேர்ந்த 1,400 பணியாளர்களுக்கு, பெரம்பூர் பந்தர் கார்டன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி இப்பயிற்சியினைத் தலைமை தாங்கி நடத்தினார்.
திரு.வி.க நகர் தொகுதி: பெரம்பூர் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சியில் சுமார் 1,300 பணியாளர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் பால்பிரின்ஸ் ராஜ்குமார் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றன.
பெரம்பூர் தொகுதி: வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சியில் 1,421 பணியாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா இப்பயிற்சியினை ஒருங்கிணைத்தார்.
இந்தப் பயிற்சி வகுப்பில் அலுவலர்களுக்குப் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.
வாக்குச்சாவடி மேலாண்மை: வாக்குச்சாவடி களைச் சரியாக அமைத்தல் மற்றும் தேவையான உபகரணங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் முறை மற்றும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம்.
ஆவணப் பணிகள்: தேர்தல் பணியின் போது பூர்த்தி செய்ய வேண்டிய பல்வேறு படிவங்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முதற்கட்ட பயிற்சியைத் தொடர்ந்து, அடுத்தகட்ட பயிற்சிகள் தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல்
சென்னை மாநகராட்சியில் வேட்புமனுத் தாக்கல் – முக்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்!
சென்னை, மார்ச் 29 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அட்டவணை மற்றும் விதிமுறைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் குறித்த விவரங்கள் வருமாறு:
மனுத்தாக்கல் தொடக்கம்: மார்ச் 30, 2026 (திங்கட்கிழமை) மனுத்தாக்கல் முடிவு: ஏப்ரல் 6, 2026 (திங்கட்கிழமை) நேரம்: தினசரி காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே. விடுமுறை நாட்கள் (மனுத்தாக்கல் செய்ய இயலாதவை) 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்படி, பின்வரும் நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது: மார்ச் 31 (செவ்வாய்) ஏப்ரல் 01 (புதன்) ஏப்ரல் 03 (வெள்ளி) ஏப்ரல் 05 (ஞாயிறு) தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தேர்தல் விதிமுறைகளைப் பாதுகாக்கவும் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் அதிகபட்சமாக 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை Suvidha Portal இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம். இருப்பினும், பூர்த்தி செய்யப்பட்ட அந்த விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் சென்று மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக மனுத்தாக்கல் செய்வது மட்டும் போதுமானதல்ல. வேட்பாளர்கள் மேற்கூறிய விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, உரிய கால அவகாசத்திற்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
