சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.3.2026 முதல் 6.4.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.3.2026, 1.4.2026, 3.4.2026 மற்றும் 5.4.2026 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 6.4.2026 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
