டிஜிட்டல் யுகத்தில், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்த பெருமை சமூக வலைதளங்களுக்கு உண்டு. ஆனால், அதே தளம் இன்று ஒருவரின் திறமையையும் ஆளுமையையும் விட, அவரது உருவத்தை வைத்து இழிவுபடுத்தும் ஒரு நச்சுத்தன்மை கொண்ட ஆயுதமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இதற்குச் சமீபத்திய உதாரணம், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அபர்ணா ரஜத் கவுஷிக் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்.
2015-ஆம் ஆண்டு அய்பிஎஸ் அதிகாரியான அபர்ணா கவுஷிக், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றவாளிகளை ஒடுக்குவதிலும் சமரசமற்றவர். பி.டெக் முடித்து, கைநிறைய ஊதியம் தரும் கார்ப்பரேட் வேலையைத் துறந்து, நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சமீபத்தில் ஒரு முக்கியக் கைது நடவடிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்ற காணொலி இணையத்தில் பகிரப்பட்டது.
சுமார் 47 லட்சம் பார்வைகளைப் பெற்ற அந்த காணொலியில், அவரது கடமையை அல்லது அந்தச் சாதனையைப் பாராட்டுவதற்குப் பதிலாக, சுமார் 65,000 கமெண்டுகள் குவிந்தன. அவற்றில் பெரும்பாலானவை அவரது உடல் தோற்றத்தை இழிவாகப் பேசும் ‘உருவக் கேலி’ (Body Shaming) கருத்துகளாக இருந்தன. இது தனிப்பட்டத் தாக்குதல் மட்டுமல்ல, ஒரு நேர்மையான அதிகாரியின் மன உறுதியைக் குலைக்கும் திட்டமிட்ட சமூகச் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
உருவக் கேலி: ஒரு சமூக நோய்
உருவக் கேலி என்பது வெறும் கிண்டல் அல்ல; அது ஒரு மனிதனின் சுயமரியாதையைப் படிப்படியாகச் சிதைக்கும் விஷம். 2019-இல் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நடத்திய ஆய்வின்படி: 47.5% பெண்கள் கல்வி அல்லது பணியிடங்களில் உருவக் கேலியை எதிர்கொள்கின்றனர்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, 32.5% நிகழ்வுகளில் அந்நியர்களை விட நெருங்கிய நண்பர்களே இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய இழிவான விமர்சனங்கள் ‘பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்’ மற்றும் தீவிர மனநலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசின் மவுனமும், எழும் கேள்விகளும்!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக ஏதேனும் நடந்தால், ‘பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்’ என்று களத்தில் குதிக்கும் பாஜக மகளிர் அணியினரும் மகளிர் அமைப்புகளும், பாஜக ஆளும் மாநிலத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு இத்தகைய அவமானம் நேரும்போது அமைதி காப்பது ஏன்? என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
“உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களுக்கு இணையதளம் எவ்வளவு பாதுகாப்பற்றது?” உத்தரப் பிரதேச அரசும், ஒன்றிய உள்துறையும் இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவது, குற்றவாளிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பது போலவும், அதிகாரியின் கடமையை மட்டுப்படுத்துவது போலவுமே அமைகிறது.
ஒரு பெண்ணின் அழகு அல்லது உருவம் அவரது அடையாளம் அல்ல. அவரது அறிவு, ஆளுமை மற்றும் அவர் சமூகத்திற்குச் செய்யும் பணியே அவரது உண்மையான அடையாளம். அபர்ணா கவுஷிக் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்களால் தளர்ந்துவிடக் கூடாது. இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதும், உருவக் கேலி செய்பவர்கள் மீது கடுமையான தண்டனைகளைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவதும் தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.
