சென்னை, மார்ச் 27- தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50,000க்கும் அதிகம் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் இல்லாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் சோதனை களின்போது பணம் கொண்டு செல்வோருக்காக முக்கிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50,000க்கும் அதிகம் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் இல்லாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் வரை எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் வரும் 27ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம், அதனை தொடர்ந்து மாநிலம் தழுவிய கடைஅடைப்பு போராட்டம் என தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பணம் பறிமுதல் செய்யப்படுவதில் சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “மருத்துவக் காரணத்திற்கு மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும். பணத்திற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளம் வழியாகக் கூட காண்பிக்கலாம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அர்ச்சனா பட்நாயக், “ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக்கூடிய சூழல் உள்ளது. தேர்தலில் ஒரே பெயரில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்று சொல்ல முடியாது. அதனால்தான் வேட்பாளரின் ஒளிப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் குறித்து இணையதளம் மற்றும் கடிதம் வாயிலாக புகார் ஏதேனும் அளித்தால் அதில் அவர்கள் கையொப்பமிட்டு புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை வந்திருக்கக்கூடிய மனுக்கள் கையொப்பம் இல்லாமல் உள்ளது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
