சென்னை, மார்ச் 27- தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான ‘சாலைக் காட்சி’களால் (Road Shows) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வேட்பாளர்கள் மீது வழக்குப் பதியப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘சாலைக் காட்சி’களுக்கு முன்னதாகவே உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். பங் கேற்கும் வாகனங்கள் மற்றும் நபர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முடிந்தவரை விடுமுறை நாட்களிலும், நெரிசல் குறைவான நேரங்களிலும் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்.
பெரிய மருத்துவமனைகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சந்தைப் பகுதிகள் வழியாகச் செல்ல அனுமதி கிடையாது.
சாலையின் மொத்த அகலத்தில் பாதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுபாதி பொதுமக்களின் அவசரத் தேவைக்காக காலியாக விடப்பட வேண்டும்.
ஒவ்வொரு 10 வாகனங்களுக்கும் (பாதுகாப்பு வாகனங்கள் தவிர்த்து) இடையே குறைந்தபட்சம் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தவறினால் காவல்துறை அணிவகுப்பைத் தடுத்து நிறுத்தும். பிரச்சார வாகனத்தில் 1 அடி x 1/2 அடி அளவிலான ஒரே ஒரு கொடி மட்டுமே கட்டப்பட வேண்டும். கையில் ஏந்தும் பேனர்கள் 6 அடி x 4 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யானை, குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிச் சீருடை அணிந்த குழந்தைகளைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது.
பட்டாசு வெடிக்கவும், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு செல்லவும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. தேர்வு காலங்களில் உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
