புதுச்சேரி, மார்ச் 26 புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஒரு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் – திமுக இருகட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனிடையே இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வேட்புமனு தாக்கல் இறுதி நாளான (24.3.2026 அன்று) முடிவடைந்தது. இதில் காங்கிரஸூக்கு 16 இடங்களும், திமுகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
மேலும் திமுக தரப்பில் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்களை திமுக ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் வெளியிட்டனர்.
அதன்விவரம்: வில்லியனூர் – திமுக மாநில அமைப்பாளர் சிவா சட்டமன்ற உறுப்பினர், மங்கலம்-எஸ்.எஸ். ரங்கன், திருபுவனை-அங்காளன்(சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்), பாகூர் – சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முதலியார்பேட்டை – சட்டமன்ற உறுப்பினர் சம்பத், உப்பளம்-சட்டமன்ற உறுப்பினர், அனிபால்கென்னடி, உருளையன்பேட்டை – கோபால், நெல்லித்தோப்பு – கார்த்திகேயன், ராஜ்பவன்-விக்னேஷ் கண்ணன் (முன்னாள் அமைச்சர் ப. கண்ணன் மகன்), காலாப்பட்டு – செந்தில்(எ)ரமேஷ், கதிர்காமம் – வடிவேலு, காரைக்கால் தெற்கு – எம்எல்ஏ நாஜிம், நிரவி டி.ஆர்.பட்டினம் – சட்டமன்ற உறுப்பினர், நாகதியாகராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்போதுள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் திமுகவில் இணைந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் திமுக தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மங்களம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து எஸ்.எஸ்.ரங்கன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
