உலகில் பசி மற்றும் பட்டினியைப் போக்கத் தன் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் நார்மன் போர்லாக். கோடிக் கணக்கான மக்களின் உயிரைக் காத்த இவரை உலகம் “பசுமைப்புரட்சியின் தந்தை” என்று அன்போடு அழைக்கிறது.
நார்மன் போர்லாக் 1914-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரெஸ்கோ என்ற இடத்தில் பிறந்தார். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, மண்ணோடும் பயிர்களோடும் சிறு வயதிலேயே பிணைப்பு ஏற்பட்டது. மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
1940-களில் மெக்சிகோவில் கோதுமை விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்ற போர்லாக் புதிய வகை கோதுமை ரகங்களை உருவாக்கினார். அதிக எடையுள்ள தானியங்களைத் தாங்கும் வலிமை கொண்ட குட்டை ரக கோதுமையை உருவாக்கினார்.
பூச்சிகளாலும் நோய்களாலும் பாதிக்கப்படாத வீரியமிக்க விதைகளை அறிமுகப்படுத்தினார்.
இதன் விளைவாக மெக்சிகோ நாடு கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு, ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியது.
1960-களில் இந்தியா பெரும் பஞ்சத்தைச் சந்தித்தபோது, நார்மன் போர்லாக் மற்றும் இந்திய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் முயற்சியால் போர்லாக்கின் வீரிய ரக விதைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இந்தியா வில் உணவு உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கி, நாட்டைப் பஞ்சத்தின் பிடியிலிருந்து மீட்டது.
அமைதி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக இவர் ஆற்றியப் பணிக்காக 1970-ஆம் ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது தவிர:
அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் (2006) ஆகியவையும் வழங்கப்பட்டன.
“பசி இருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது” என்று முழங்கிய நார்மன் போர்லாக், செப்டம்பர் 12, 2009 அன்று மறைந்தார். அவரது 112ஆவது பிறந்தநாளான இன்று (25.3.2026) நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மண்ணையும் மக்களையும் காப்போம் என்று உறுதி ஏற்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
