கோவை, மார்ச் 25- “ஏழாவது வயதிலேயே எனக்குக் காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது; ஆனால், என் ஆசிரியர்கள் அதை ஒரு குறையாகவே என்னிடம் காட்டவில்லை,” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சஞ்சய்.
கோவையின் கணபதி பகுதியைச் சேர்ந்த பிரேமலதாவின் மகன் சஞ்சய், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் 953ஆவது இடம் பிடித்து அய்.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தனது வெற்றியின் வேர்களைத் தேடிச் சென்ற சஞ்சய், சி.எம்.எஸ் தொடக்கப் பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை தனக்கு தமிழ் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ராணியை, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்துப் பெற்றார்.
இந்த சந்திப்பு குறித்து சஞ்சய் கூறுகையில், தனக்கு 7 வயது இருக்கும் பொழுதே காது கேட்கும் திறன் குறைவு என்பது கண்டறியப்பட்டது. ஆனால், எனது பள்ளி ஆசிரியர்கள் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் என்னை மற்ற மாணவர்கள் போன்றே சமமாக நடத்தினார்கள். குறிப்பாக தனது தமிழாசிரியர் பாடத்துடன் சேர்த்து ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்தார். அன்று கற்றுக்கொண்ட ஒழுக்கம் தனக்கு அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்றார்.
ஒரு மாணவனின் வெற்றிக்கு வெறும் மதிப்பெண்கள் மட்டும் போதாது, ஆசிரியர்கள் விதைக்கும் நற்பண்புகளே அடித்தளம் என்பதை இந்தச் சந்திப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.
