காஞ்சிபுரம், மார்ச் 25- புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள், அரசின் தொடர் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தற்போது இவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விமான நிலையம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில், சுமார் 5,600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இந்தத் திட்டத்திற்காகத் தங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களை வழங்க மறுத்து, ஏகனாபுரம் மக்கள் கடந்த 1,000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கிராம சபைக் கூட்டங்களில் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 17 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.: மக்களின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அரசு நில எடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 1,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுக்கான எடுப்புப் பணிகள் முடிந்துள்ளன.
தேர்தல் புறக்கணிப்பும் மாற்றமும்
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஏகனாபுரம் கிராமத்திலுள்ள 2 ஓட்டுச் சாவடிகளிலும் ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காமல் தேர்தலை முழுமையாகப் புறக்கணித்தனர்.
அதிகாரிகளின் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் அப்போது தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதேபோன்ற சூழல் நிலவுமோ என அதிகாரிகள் கவலையில் இருந்தனர். ஆனால், நேற்று ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
சட்டமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை. எங்களுக்காகப் பல அரசியல் கட்சியினர் ஆதரவு குரல் கொடுத் துள்ளனர். எனவே, ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளோம்; எங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்போம்” என்றார் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணி.
நிம்மதி பெருமூச்சில் அதிகாரிகள்
இந்த அறிவிப்பால் தேர்தல் அதிகாரிகள் மிகுந்த உற்சாகமடைந் துள்ளனர். கடந்த முறையைப் போல இம்முறை மக்களுடன் மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என அவர்கள் கருதுகின்றனர். அதேபோல், கடந்த தேர்தலில் கிராமத்திற்குள் செல்லத் தயங்கிய அரசியல் கட்சியினரும், மக்களின் இந்த மாற்றத்தால் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.
