
செங்கல்பட்டு, மார்ச் 24– ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு செங்கல்பட்டில் தமிழ்நாடு பாரம்பரிய உணவை வாழையிலையில் சாப்பிட்டு, அதைத் தமிழில் பதிவிட்டுள்ளார்
கடந்த ஒடிசா மாநிலத் தேர்தலின் போது, பாஜகவின் அதிகாரப்பூர்வ டில்லி தலைமை ஒரு சர்ச்சைக்குரிய காட்சிப்பதிவை வெளியிட்டது. அதில், தமிழரான ஒடிசா தலைமைச் செயலாளர் பழைய சோற்றை வாழையிலையில் ஊற்றிச் சாப்பிடுவதை “என்ன ஒரு கலாச்சாரம்?” என்பது போன்ற தொனியில் கிண்டல் செய்திருந்தனர். ஒடிசா மாநில பாஜக மட்டுமல்லாமல், தேசிய அளவிலான பாஜக தலைமையே தமிழர்களின் உணவு முறையை ஏளனம் செய்திருந்தது அது அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அன்று தமிழர்களின் உணவை எள்ளி நகையாடிய அதே பாஜக, இன்று தமிழ்நாட்டிற்கு வந்து வாழையிலையில் சோறு தின்றுவிட்டு, ஏஅய் (AI) மூலம் மொழிபெயர்த்து “மிகவும் சுவையான தமிழ் உணவுக்கு நன்றி எனப் பதிவிடுவது மிகப்பெரிய நாடகம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உணவு சமைத்தவருக்குத் தான் நன்றி கூறுவார்கள்.
வைரலாகும் முக்கியக் கருத்துகள்:
* வேடம் போடும் பாஜக: தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க.வினர் போடும் வேடங்களை தமிழ்நாடு நன்கு அறியும். வடமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, ஓட்டுக்காக இங்கே வந்து தமிழ் வேடம் போடுவது எடுபடாது என்றும்,
* ஒடிசாவில் தமிழரை கிண்டல் செய்த காட்சிப் பதிவை மறக்க முடியுமா? அன்று கிண்டல், இன்று புகழ்ச்சியா? என்றும்,
* “பா.ஜ.க.விற்கான அரசியல் முடிவுரை இம்மண்ணில் இருந்துதான் எழுதப்படும்” என்றும் சமூக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவரின் உபசரிப்பில் நடந்த இந்த மதிய உணவு, தற்போது அமைச்சருக்குப் பெருமையைக் காட்டிலும், பாஜகவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நிகழ்வாகவே மாறியுள்ளது.
