இராமாயண, பாரத ஆபாசங்களை உலகறிய எடுத்தியம்பி, பன்மையை நிலைநாட்டக் கங்கணங்கட்டி, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கை இந்தியர் சங்கத்தாரால் நடத்தப் பெற்று வந்த ‘இந்தியன்’ என்ற மாத வெளியீட்டில் ‘இராமன் வரலாறு’ என்னும் கட்டுரை எழுதி, 1923 ஜூலை 10ஆம் நாள் வெளியிட்டார் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை. இக்கட்டுரையைப் படித்தத் தந்தை பெரியார் அக்கட்டுரை ஆசிரியரைச் சந்திக்க விரும்பினார்.
1921இல் கோவில்பட்டி பத்திவிளை ஆண்டு விழாத் தலைவராக வந்த பெரியாருக்கு இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை அறிமுகம் செய்து வைக்கப் பெற்றார். அப்போது பெரியார் தம் வார இதழான ‘குடிஅரசில்’ இராமாயணத்தை ஆய்ந்து தொடர் கட்டுரை எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார்.
தந்தை பெரியார் இ.மு.சுப்பிர மணியப்பிள்ளைக்கு எழுதிய கடிதம்
ஈ.வெ.ரா. சென்னை, நாள்.30.12.1947
அன்புள்ள தோழர் சுப்பிரமணியம் அவர்கட்குத் தங்கள் கடிதம் கிடைத்தது. ஈ.வெ.ரா. வணக்கம் – “விடுதலை’ ஜனவரி 1 தேதியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ‘விடுதலை’க்குச் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை, பிரசுரிக்கும்படியாக வாரந்தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தால் நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்ளுகிறேன். அதற்காக விடுதலை ஆபிசிலிருந்து ஆண்டுக்கு ரூ.100 வீதம் அனுப்பி வருவார்கள். இராமாயண ஆராய்ச்சி திருந்திய பதிப்பு பிரசுரித்து வெளியிட நேர்ந்தால் அதற்காகவும் தங்கட்கு ஏதாவது மொத்தமாக அனுப்பச் செய்கிறேன். என்னுடைய பிரசுரம் எல்லாம் மிக மிகக் குறைந்த விலையாக இருக்கும். விற்பனையில் ஒழுங்கு இருக்காது. பெரும்பாலும் இலவசமாகவும் போய்விடும். ஆகையால் ஒரு வியாபார முறைக்குக் கட்டுப்பட்டு நடப்பது மிகவும் கஷ்டமான காரியம். ‘குடிஅரசு என் வசம் இல்லை’ அதை 3 வருட வாய்தா, ஒரு குத்தகத் தொகையின் மீது கொடுத்து விட்டேன். ஆனாலும் அனுப்பலாம். புதுக்கட்டுரை இருந்தால் அருள்கூர்ந்து அனுப்புங்கள். வணக்கம். பதில் எதிர்பார்க்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
ஈ.வெ.ரா.
குறிப்பு: “சந்திரசேசகரப் பாவலர்” என்ற புனைப் பெயரில் ‘குடிஅரசு’வில் இராமாயண ஆராய்ச்சி பற்றி எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
