சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் நிறைவையொட்டி
புதுடில்லியில் நடைபெற்ற இருநாள் பன்னாட்டு மாநாட்டுத் தொடக்க விழா





புதுடில்லி, மார்ச் 22 புதுடில்லியில் உள்ள டான்போஸ்கோ தொழில்நுட்பக் கல்வி வளாகத் தில் கடந்த மார்ச் 19, 20 ஆகிய இரு நாள்கள் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு குறித்த பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. ரீவாம்ப் அமைப்பும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணைந்து இந்தப் பன்னாட்டு மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. இந்திய சமூகக் கல்விக்கான மய்யம், தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரி, பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா ஆகிய நிறுவனங்கள் உடன் ஒருங்கிணைத்தன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இம் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆய்வுக் கட்டுரைகளுக்காக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டன. விண்ணப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் மாநாட்டில் ஏற்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து, பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்த்தி சரவணன் தலைமையில், முனைவர் சாம்ராஜ், விரிவுரையாளர் சிவாஜி மற்றும் 13 மாணவர்கள் பங்கேற்றனர்.


இம் மாநாட்டுக்கு டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்சஸ், அய்.அய்.டி.டில்லி, சென்னைப் பல்கலைக்கழகம், பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகம், தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் செட்டில்மெண்ட், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அய்தராபாத் செயிண்ட் ஆன்ஸ் கல்லூரி, லொயோலா கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் பேராளர்கள் வருகை தந்து கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

முதல் நாளான மார்ச் 19 அன்று காலை 10 மணியளவில் தொடக்கவிழா நடைபெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்த்தி சரவணன் வரவேற்புரையாற்றினார். ரீவாம்ப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளையகுமார் மாநாட்டைக் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

டில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் என்.சுகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு பங்களிப்பு மகத்தானது. இந்திய வரலாற்றுத் துறையால் அது முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. தந்தை பெரியாரின் சிந்தனைகளும், இயக்கமும் தமிழ்நாட்டுக்கும், தென்னகத் துக்கும் மட்டும் உரியதல்ல. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, சமத்துவக் கொள்கைகளைப் பெரியார் தனித்தன்மையுடன் எடுத் துரைத்தவராவார். அவரது கருத்துகளை இந்திய ஆய்வுப் புலத்தில் திரை போட்டு மறைத்தே வந்துள்ளனர். இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்குப் பெரியாரின் கருத்துகளையும், சிந்தனை களையும் மாணவர் களும், ஆய்வாளர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்; ஆராய வேண்டும்” என்று குறிப்பிட்டார். பெரியாரின் கருத்துகளை மிகத் தீவிரமாக எடுத்துரைத்து அவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்துரையாற்றினார். இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் கருத்துகள் வடபுலத்திற்கு வந்து சேர்வதைக் கண்டு அச்சம்கொண்டு ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்கள் பெரியார் குறித்த அவதூறுக் கருத்துகளையும், பொய்ச் செய்திகளையும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பரப்பி வருவதை எடுத்துக் காட்டினார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கால வெற்றியை இன்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் தொடர் செயல்பாட்டின் வழி ஈட்டிவருவதைக் குறித்து விளக்கி உரையாற்றினார்.
பின்னர் காணொலி வாயிலாகக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், தேவை, இன்றைய பணிகள், அந்தப் பணிகளை அரசு ரீதியாக நடைமுறைப்படுத்திய அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பணிகள், உலகளாவிய அளவில் சுயமரியாதைக் கருத்துகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி உரையாற்றினார்.
தொடர்ந்து ரீவாம்ப் அமைப்பின் பொறுப்பாளர் யாழினி நன்றியுரையாற்றினார்.

மதிய உணவுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு அரங்குகளில் தனித்தனியாக அமர்வுகள் நடைபெற்றன.
ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்கள் தவிர பார்வையாளர்களாகவும், பங்கேற்பாளர்களாகவும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பேராசிரி யர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு பல் கலைக்கழகங்களின் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாட்டுக்காகப் பதிவு செய்திருந்தோருக்குத் தங்குமிடமும், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
