கேள்வி 1: “நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே?
– வ..அன்புக்கரசன், நெல்லை

பதில் 1: நமக்கும் புரியவில்லை. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்பவர்கள் கடமையாற்றுகையில் எதையும் objective ஆக – விருப்பு வெறுப்பு இன்றித் தம் பணியைப் புரிய வேண்டியதே நீதிமன்ற நீதி ஆளுமையின் தத்துவம்!
தனிப்பட்ட முறையில் “நான், எனது” என்ற சிந்தனையே நீதி பரிபாலனத் தத்துவத்திற்கே எதிரிடையான மனப்பாங்கு – எடுத்த உறுதிமொழி, ‘விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாமல்’ என்பதற்கும் நேர் முரண் என்பது ஏனோ அவருக்குப் புரியவில்லைபோலும்!
- • •
கேள்வி 2: அகண்ட பாரதம் போல் அகண்ட இஸ்ரேல் திட்டம் அவர்களிடம் உள்ளதாக ஆங்கில ஏடு கட்டுரை எழுதியுள்ளதே, யாரிடமிருந்து இந்த அய்டியாவைப் பெற்றிருப்பார்கள்?
– வெ.தமிழ்மாறன், புதுவை
பதில் 2: ‘அகண்ட’ நீளுவது ஏகாதிபத்திய எஜமான மனப்போக்கே தவிர, ஜனநாயகத் தத்துவத்திற்கு உகந்தது அல்ல. இஸ்லாமிய நாடுகளை மனதிற்கொண்டு கூறுகிறாரோ என்னவோ, அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.

- • •
கேள்வி 3: மனித நாகரிகத்தின் துவக்கத்தில் இருந்து இருக்கும் ஒரு நாட்டை 40 ஆண்டுகள் கூட ஆகாத ஒரு நாடு அடிபணியவைக்க முயல்வது எதைக்குறிக்கிறது?
– ம.முகுந்தன், தாம்பரம்
பதில் 3: இனவெறி, அதிகார வெறியின் திமிரைக் காட்டுகிறது!
- • •
கேள்வி 4: பெண்கள் குறித்த அநாகரிகப் பேச்சு குறித்து குறைந்தபட்ச வருத்தம் கூட அக்கட்சித் தலைவரிடமிருந்து வரவில்லையே?
– தா.சத்தியசீலன், திருத்தணி
பதில் 4: அரசியல் கட்சித் தலைவர்கள், இந்த அரசியல் அருவருக்கக் கூடிய ஆபாச பேச்சுகளைப் பேசுபவர்களை அக்கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தால்தான் அவர்களுக்கும், சமூகத்திற்கும் நல்லது!
- • •
கேள்வி 5: வாரணாசியில் கங்கையில் நோன்பு திறந்ததற்காக கங்கையைத் தீட்டாக்கிவிட்டார்கள் என்று 11 இஸ்லாமியர்களை கைது செய்து சிறையில் தள்ளியதை காவல்துறையினரே நியாயப்படுத்தி உள்ளார்களே?
– ரா.கன்னியப்பன், காஞ்சிபுரம்
பதில் 5: மோடி ஆட்சியும், மோடி தொகுதியும் எப்படிப்பட்ட ஆளுமையின் கீழ் நடைபோடுகின்றன என்பதற்கு நல்ல சாட்சிகளாகும்!
- • •
கேள்வி 6: நிதிஷ்குமார் மாநிலங்களவைக்குச் செல்வதால் மாநிலத்தில் அவரின் கட்சியின் கதி என்ன? இது அக்கட்சிக்குத் தற்கொலை முயற்சியா? வளர்ச்சியா?
– அ.கார்மேகன், திருவள்ளூர்
பதில் 6: அதோ கதி. ஏற்கெனவே அவருடன் பல ஆண்டுகள் பயணித்தவர்கள் எல்லாம் வெறுத்து வெளியேறி விட்டார்களே!
- • •
கேள்வி 7: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பமாமே? மோடி வித்தை அங்கு எடுபடவில்லையா?
– ம.சந்திரன், திண்டிவனம்
பதில் 7: புதுச்சேரி அரசியலில் அப்பா அழுக்குசாமியின் சக்தியை அந்த மாநில (பொல்திக்) politic – இனி காணத்தான் போகிறது!
- • •
கேள்வி 8: கடவுள் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி என கொண்டாடுபவர்கள் இறந்த நாளை ஏன் வருத்தமான நாளாக – கெட்ட நாளாகக் கடைப்பிடிப்பதில்லை?
– அ.வேலன், கரூர்
பதில் 8: பக்தகோடிகள்தான் யோசிக்க வேண்டும்.
- • •
கேள்வி 9: எரிவாயு தட்டுப்பாட்டால் மீண்டும் ‘விறகு அடுப்பு’க்கு மக்கள் மாற வேண்டியதுதானா?
– ம.காந்திமதி, மதுரை
பதில் 9: ‘விஸ்வகுரு’வாக இந்தியா மாறி வருகிறது என்கிறார் பிரதமர் மோடி. அவர்தான் இதற்குப் பதில் கூற முழுத் தகுதி படைத்தவர்.
- • •
கேள்வி 10: 16 வயதுக்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை அறிவித்தது நவீன உலகில் சரியானதுதானா?
– ப.குணசேகரன், வேளச்சேரி

பதில் 10: நன்மையும், தீமையும் கலந்துள்ள முடிவு – கண்காணிப்பது எளிதல்ல. சட்டத்தை அமல்படுத்துதலும் அவ்வளவு எளிதல்ல.
