சென்னை, மார்ச் 20- தி.மு.க.வில் நேற்று (19.3.2026) 3-ஆவது நாளாக நேர்காணல் நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
வேட்பாளர் நேர்காணல்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் தயாராகிவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சியினரிடம் நேர்காணலையும் தி.மு.க. நடத்தி வருகிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று 3-ஆவது நாளாக நேர்காணல் நடந்தது.
அந்த வகையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
2 ஆயிரம் பேர்
நேற்று காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 33 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தவர்களிடமும், பிற்பகலில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட 19 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சில தொகுதிகளில் 130 முதல் 150 வேட்பாளர்கள் வரை போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது
தர்மபுரி, சேலம்
நேர்காணலில் ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்பம் தெரிவித்திருந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
அந்த வகையில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தொழல் அதிபர் மகேந்திரன் உள்ளிட்டோர் நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்றனர்.
இதனையடுத்து இன்று (20.3.2026) காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கும், மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.
ரம்ஜான்
நாளை (21.3.2026) காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, மத்தியம், தெற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு, மத்தியம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட உள்ளதால், இந்த மாவட்டங் களுக்கான நேர்காணல் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
