கோவை, மார்ச் 20- கோவை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்துவந்த மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காவல் துறையினர் மீட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர், பிறந்து சில மாதங்களேயான பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்தியபடி பிச்சை பெற்று வந்தனர். கொளுத்தும் வெயிலிலும், அவ்வப்போது பெய்யும் மழையிலும் பச்சிளம் குழந்தைகளுடன் அவர்கள் சாலையோரம் தவிப்பதைக் கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இது குறித்த புகார்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்களை மீட்டனர். விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
குழந்தைகளின் நலன் கருதியும், பாதுகாப்பற்ற முறையில் சாலைகளில் தங்குவதைத் தவிர்க்கவும் இந்தப் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் காவல்துறை எச்சரித்து உரிய பாதுகாப்புடன் அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினரின் இந்த மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
