திருவனந்தபுரம், மார்ச் 17– சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்லும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதால், அங்குள்ள உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பல மாநிலங்களில் சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
அதிர்ச்சி
கேரளாவிலும், சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சிறிய உணவகங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப துவங்கியுள்ளனர்.
கேரளாவில் பெரும்பாலான உணவகங்களில், அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
அங்கு, அடுத்த மாத இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின் இவர்கள் கேரளா திரும்புவர் என கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் உணவகங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் மய்யத்தைச் சேர்ந்த பினாய் பீட்டர் கூறுகையில், ‘கேரளாவில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 50 சதவீதம் உள்ளனர். வழக்கமாக தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள், உணவகங்கள் மூடப்பட்டதால், முன்கூட்டியே புறப்பட்டுள்ளனர்.
“ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவும் பலர் முன்கூட்டியே கிளம்பியுள்ளனர். அனைவரும் ஒரு மாதத்துக்கு பின்னரே ஊர் திரும்புவர் என்பதால், நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணி
40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
சென்னை, மார்ச் 17– விமான நிலையத்தில் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் டெர்மினல் 4 அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெர்மினல் 4 அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, டெர்மினல் 2 நுழைவு வாயில் டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்குள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராபிக் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெர்மினல் 1, டெர்மினல் 2 வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்கள் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில்
பிஎச்.டி., எம்.எஸ். படிப்புகளில்
250 மாணவர்களுக்கு
மாதம் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை
இணைய வழியாக மார்ச் 28ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
சென்னை, மார்ச் 17- அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.குமரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத் துறை சார்ந்த கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்அய்டி, கட்டடக்கலை, திட்டமிடல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சி படிப்புகளில் (பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, கலை அறிவியல் பாடங்கள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தொழில்துறையில் பணியாற்றுவோர், முதுநிலை பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 250 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு வரும் 28.3.2026ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களுடன் 4.4.2026ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.cfr.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
