சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகை கடன்கள் தொடர்பான தள்ளுபடி என்றாலே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய செய்தியாகும்.. அந்தவகையில், கூட்டுறவு வங்கியில் எவ்வளவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது? எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்வது கட்டாயமாகும். அவற்றின் விவரம்:
அவசர தேவைகள், மருத்துவச் செலவுகள், விவசாயப் பணிகள் அல்லது குடும்பச் செலவுகளுக்காக பலரும் தங்களின் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறுகிறார்கள்..
தங்க நகைக்கடன் தள்ளுபடி
இந்த நகை கடன்களில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்வது குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது.. குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன என்ற தகவல் பரவியுள்ளதால், பலரும் தங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளனர்..
அரசு வழிகாட்டுதல்களின் படி, இந்த திட்டம் முதன்மையாக பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டதாகும்..
கூட்டுறவு வங்கி நகை கடன்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்றிருந்தாலும், பொதுவாக ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கான கடன்களே தள்ளுபடி ஆய்விற்குள் கொண்டு வரப்படுகின்றன..
மேலும், கடன் பெற்ற நபர் அந்த கூட்டுறவு வங்கி அல்லது சங்கம் செயல்படும் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.. குடும்ப அட்டை மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களின் அடிப்படையில் குடும்ப விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது..
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கு தனியாக புதிய விண்ணப்பம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது.. பொதுவாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், கூட்டுறவுத் துறை அதிகாரிகளே வங்கிகளில் உள்ள கடன் பதிவுகளை ஆய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையே பின்பற்றப்படுகிறது..
கடன் வாங்கியவரின் ஆதார் எண், குடும்ப அட்டை எண், நிலுவையில் உள்ள கடன் தொகை மற்றும் அடகு வைக்கப்பட்டுள்ள நகையின் அளவு போன்ற விவரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படுகின்றன.. அதன் அடிப்படையில் தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு அனுப்பப்படுகின்றன..
ஒரு நபரின் பெயர் தள்ளுபடி பட்டியலில் உள்ளதா என்பதை அறிய, அவர் கடன் பெற்ற கூட்டுறவு வங்கி கிளைக்குச் சென்று அதிகாரிகளிடம் விசாரிக்கலாம்..
தேவையான ஆவணங்கள்
தேவையானபட்சத்தில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல்களை வழங்கி தங்கள் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் கூறப்படுகிறது.. தகுதி உறுதி செய்யப்பட்ட பின், அதற்கான பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டெடுக்கும் நடைமுறைகள் தொடங்கப்படுகின்றன..
இதனால் நீண்ட நாட்களாக கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்ட பல குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
கிராமப்புறங்களில் பொருளாதாரச் சுமையை குறைத்து, விவசாயிகளும் பொதுமக்களும் மீண்டும் தங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது..!!
