சென்னை, மார்ச் 16– திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர் களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 17ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மார்ச் 18ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 19ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 20ஆம் தேதி நடக்கிறது.
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு 21ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது
