சென்னை, மார்ச் 16- “அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா, அமைந்தகரையில் நேற்று (15.3.2026) நடைபெற்றது.
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவர் டி.பி.எம். முகிதீன் கான் தலைமையில் நடந்த இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி ரமலான் நோன்பை திறந்து வைத்தார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“திமுகவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இருக்கக்கூடிய உறவு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இந்த இயக்கம் தொடங்கியது முதல் இருந்த உறவு. காயிதே மில்லத் காலம் முதல் அண்ணா, கலைஞர், இப்போது நான் என தலைமை முறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நம்மை யாராலும் ஒரு நாளும் பிரிக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தப்படும் பட்டியல் என்பது மிக நீளமானது. உங்களுக்கு எப்போதெல்லாம் என்ன தேவைப்பட்டாலும், அதைச் செயல் படுத்துவது தான் திமுக.
பெண்கள் மிகப் பெரிய பலம்
திமுக அரசின் மிகப் பெரிய பலம் பெண்கள்தான். அதிலும் இஸ்லாமிய பெண்கள் நம்முடன் இருக்கும் போது நம்முடைய பலம் இன்னும் பலமடங்கு பெருகும். இஸ்லாமிய மக்களுக்கான அனைத்து அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது திமுக தான். இந்த ஒற்றுமைதான் தமிழ்நாட்டிற்கு அவசியம். இதற்கு நேர்மாறான நிலைமை பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இருக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாட முடியவில்லை.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றி, என்றாவது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கருத்து சொல்லியிருக்கிறாரா? பழனிசாமியிடம் நான் கேட்பது எல்லாம்: அ.தி.மு.க. என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா? சிறுபான்மை மக்கள்மீது வெறுப்பை தூண்டி விட்டு, அதில் குளிர்காயக்கூடிய பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி சிறுபான்மை மக்களின் உரிமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்?
பழனிசாமி மட்டுமல்ல, பலரும் இப்படித்தான் நோன்பு திறக்கும் ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். ஆனால் இஸ்லாமியருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அமைதியாகி விடுவார்கள்.
ஓடி ஒளிந்து கொள்வார்கள். எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆட்சியில் இருந்த போதும் சரி, இஸ்லாமியர்களுடைய உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான். களத்தில் இறங்கி போராடுகிறது. சட்டப்பேரவையிலும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
இதனால் தான் சிறுபான்மை மக்களும் தி.மு.க.வுக்கு துணையாக நிற்கின்றனர். இந்த ஒற்றுமை எந்த நாளும் தொடர வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
