அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று!
பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே
நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்!
அன்னை மணியம்மையாருக்குப் பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று (16.3.2026).
நினைவு நாள் என்பது
ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!
இந்நாளில்தான் நாம் அனைவரும் அன்னை அவர்களை நினைவு கூர்கிறோம்; தொண்டறத்தாயின் ஒப்பில்லாத் தொண்டினைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல.
அவர்களை என்றும் நாம் மறந்தோமில்லை; இன்று மட்டும் நினைவு என்பதற்கு! இந்நாள் – நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், அவ்வளவே!
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பேரி யக்கத்தைத், தன்னுடைய ஈடற்ற தொண்டால், தொய்வில்லாப் பணியால் 95 ஆண்டு வாழ வைத்த அரும்பெரும் தன்னல மறுப்பாளர் அருமை அன்னையார்!
தொண்டறம் –
மிக எளிய வாழ்வு இவைதான் அன்னையார்!
கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தாயாகி, தாலாட்டி, வளர்த்து வாழ்வளித்துக் காப்பாற்றி, இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாத்து வளர்த்த தாய்ப்பறவை அவர்!

பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியர் அவர் – இன்றும், என்றும்!
மானுடம் என்பது ஒரு சுயநல வட்டம் அல்ல; எல்லையற்ற (மானிட) பெரும் நெஞ்சுரம் கொண்ட வர்களைக் களப் போராளிகளாக்கி, இலட்சியத்தை வென்றெடுத்து, அவனிக்குப் பொதுவாழ்வு – ‘‘பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியராகத்’’ திகழ்பவர் அவர் – இன்றும், என்றும்! கூடுதலாக ‘விடுதலை’யின் அதிகாரப்பூர்வ ஆசிரியராகப் பல ஆண்டுகள் திகழ்ந்தவர்!
நம்மையெல்லாம் ‘நெருக்கடி காலம்’ என்ற ஓர் இருண்ட அடக்குமுறை காலத்திலும், கண்ணை இமை காப்பதைப்போல் கழகத்தைக் காப்பாற்றிட, தனது நலவாழ்வைப் பற்றிக்கூட கவலைப்படாது, சுற்றிச் சுழன்று, பாதுகாப்புக் கவசமாய்த் திகழ்ந்தவர்.
வேலூர் தந்த வீராங்கனை அவர்!
பல்லாண்டு, பெரும் அவமானத்தையே வெகு மானமாகப் பெற்ற காலத்திலும்கூட, நிலைகுலையாமல், தலைதாழாமல் வென்றெடுத்த வேலூர் தந்த வீராங்கனை அவர்!
எல்லாவற்றையும் தாண்டி, தம்மிடம் இருந்த சொத்துகளை – நம் தந்தையைப்போல பொதுத் தொண்டுக்குரியதாக்கி, பொல்லாங்கு சொன்னவர்களை வெட்கித் தலைகுனிய வைத்து, பெரும் கொள்கைப் பிழம்பாய் வெளிச்சம் தந்த விடிவெள்ளி அவர்!
அதனால், வீட்டுக்குள் அடைபட்ட பெண்களின் மூளை விலங்கினை உடைத்து, முன்னேற, பல்கலைக் கழகமும், கல்லூரிகளும், அவர் பெயரில் வெளிச்சம் பாய்ச்சும் கல்விக் கலங்கரை விளக்கமாகி ஓளிவீசி நிற்கின்றன!
நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார்!
பிரியா விடை கொடுத்தோம் – அன்று!
பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்றும்!!
வாழ்க தொண்டறத்தாய்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16.3.2026
