கேள்வி: இராவண லீலா கண்ட புரட்சித்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்தநாள் விழா 10.03.2026 அன்று கோவை மாநகரில் தங்கள் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றதை அறிந்த இன எதிரிகள் ஒருவித கலக்கத்தில் இருப்பது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில்: தந்தை பெரியார் அவர்களே கூறினார். “எனது கொள்கை வெற்றிகள் வேண்டுமானால் காலதாமதமாக கிடைக்கலாம்; ஆனால், ஒருபோதும் தோற்காது!” என்று.அதைத்தான் நாளும் கண்டு நாம் மகிழ்கிறோம்; போராட்டக் களத்தில் உற்சாகம் கொள்கிறோம்.

கேள்வி: மதுரை விமான நிலையத்தைத் தரம் உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதே – இதுவரை முடியாது என்றவாறு இருந்த ஒன்றிய அரசு தற்போது ஒப்புதல் அளித்ததன் பின்னணி?
– குணசுந்தர், வாணியம்பாடி
பதில்: முன்பே கேட்டபோது மறுத்தார். இன்று தம்பட்டம் அடித்துக் கூறுகிறார். எல்லாம் “வோட்டப்பன்” செய்கிற சித்துவேலை. “ஒசூருக்கு விமான நிலையம் அமைக்க ஏனோ அரசின் பார்வை படாமல் மறுக்கின்றது, நியாயமா?” என்ற கேள்விக்கு அடுத்த முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் பதில் கூறுவாரா?
கேள்வி: ‘தமிழ்நாட்டில் இருந்த நாட்கள் பொற்காலம்’ என்று மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே! அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– சக்திவேல், பெரம்பலூர்
பதில்: அவரை மதிக்க முடியாவிட்டாலும், அவர் வகித்த பெரும் பதவியை மதிப்பிழக்க விடக் கூடாது என்று கருதியே, அவரது அரசியல் அடாவடி ஆரியத்தனத்தைத் தமிழ்நாடு சகித்துக்கொண்டது! இதுதான் திராவிடம் – திராவிட நாகரிகம் – பண்பாடு! இன்னா செய்தாரையும் ‘கண்ணியம்’ குறையாமல் மதித்தது திராவிடம். மணிப்பூரில் முன்பு நடந்ததும், நடத்தப்பட்ட கசப்பான அனுபவமும் நினைவுக்கு வரும். அவர் நெஞ்சே அவரைச் சுடும்.

கேள்வி: “சும்மா இருக்கும் மனைவி என்று சொல்வது கட்டுக்கதை. ஒரு மனைவி பணிபுரியாத நிலையையும் கணவரை வேண்டுமென்றே சார்ந்திருப்பதையும் சமப்படுத்தும் பார்வையை ஒப்புக்கொள்ள முடியாது” எனக் கருத்து தெரிவித்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து ஜீவனாம்சம் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா ரூ.50,000 ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டுள்ளது பற்றி?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில்: சரியான நடவடிக்கைதான்! ஆணாதிக்கத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி!
கேள்வி: இந்தியா முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு வந்ததற்கு அடிப்படையிலான காரணம் போர் மட்டுமா? ஒன்றிய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையா?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில்: இரண்டும்தான்!
கேள்வி: “உழைக்கத் தயாராக இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று குடிமைப் பணிக்கான யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராஜேஸ்வரி கூறியுள்ளார். பெரியார் மண்ணில்தானே இது சாத்தியம்?
– முருகன், மதுரை
பதில்: வாடிப்பட்டி என்ற சுயமரியாதை மண்ணில் வந்த உழைப்புத்தேனீ அவர். நமது வாழ்த்துகள்!
கேள்வி: மாறி மாறிப் பேசும் டிரம்பை உலக நாடுகள் நம்பினால் எதிர்காலம் என்ன ஆகும்?
– மா.சந்திரன், திண்டிவனம்
பதில்: எப்போதும் மக்கள் அவதியுறுவது “உலகமயமாகும்!” அவ்வளவுதான்!
கேள்வி: பெரிய வல்லரசுகள் சிறிய நாடுகளின் சுதந்திரத்தில் தலையிட்டு கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு என்னதான் தீர்வு?
– க.சாக்கியன், நுங்கம்பாக்கம்
பதில்: தீர்வு காண வேண்டிய பொம்மை அய்.நா.வைக் கலைத்துவிட்டு, ‘பல்’ உள்ள ஒரு சிறந்த அமைப்பினை உலகம் புதிதாகக் கட்டி போரற்ற உலகை அமைக்க உறுதி கூற முயல வேண்டும்.
கேள்வி: பெண்களை தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள். ஆனால், ஹோலிப் பண்டிகையில் பெண்கள் துன்புறுத்தப் படுவதாகச் செய்திகள் வருகின்றனவே! ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் இதைப் பற்றி வாய் திறக்கவில்லையே?
– க.வெற்றிமுரசு, காஞ்சிபுரம்
பதில்: என் உடம்பில் வந்தால் ரத்தம். உன் உடம்பில் வந்தால் தக்காளி “சட்னி’யா? காவிச்சாயம் வெளுத்து வருகிறது!
