ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசும், அதன் அமைச்சர்களும் “இரட்டை என்ஜின்” ஆட்சியில் மாநிலங்கள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக அடிக்கடி முழங்குவதுண்டு. ஆனால், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் யதார்த்த நிலையும் அந்த முழக்கங்களை வெற்று விளம்பரங்கள் என நிரூபித்து வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் தொலைநோக்கு பார்வையற்ற திட்டமிடலால் பல நூறு கோடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
பெயரளவில் திறந்து சில மாதங்களில் மூடப்பட்ட விமான நிலையம்!
உத்தரப் பிரதேசத்தில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட விமான நிலையங்களும் (குஷிநகர், அசம்கார், அலிகார், சித்திரகூட், ஷ்ரவஸ்தி, மொரதாபாத்) சில மாதங்களிலேயே விமானப் போக்குவரத்து இன்றி முடங்கியுள்ளன. ‘உடான்’ திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நிலையங்கள், இன்று பயணிகள் வராததால் ஆடு மாடுமேய்க்கும் இடமாக மட்டுமல்லாமல் உள்ளூர் சிறுவர்கள் குழுக்க நடத்தும் கிரிக்கெட் போட்டி மைதானமாகவும் மாறிப்போய்க் கிடக்கின்றன.
புள்ளிவிவரங்கள் காட்டும் அவலம்
குஷிநகர் பன்னாட்டு விமான நிலையம்: ரூ.327.3 கோடி செலவில் உருவான ஆரம்பித்த நாள் முதல், 2024 மற்றும் 2025இல் ஒரு விமானம் கூட வராததால் மூடப்பட்டுள்ளது.
அசம்கார் & அலிகார்: 2024 மார்ச் மாதம் திறக்கப்பட்ட இவை, ஒரு பயணிகூட வராததால் இறுதியில் செயல்பாட்டை நிறுத்திவிட்டன.
சித்திரகூட் & ஷ்ரவஸ்தி: ஆன்மிகத் தலங்களை மட்டும் மய்யமாக வைத்து அவசர கதியில் தொடங்கப்பட்ட இந்த நிலையங்கள் சிறிய ரக விமானம் கூட இறங்கத் தகுதியில்லாத விமான ஓடுபாதை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் இதை நிர்வாகம் இழுத்து மூடிவிட்டது.
சுமார் 500 முதல் 700 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணம் எந்தவிதப் பயனுமின்றி “விழலுக்கு இறைத்த நீராக” வீணடிக்கப்பட்டுள்ளது என்பது ஆர்.டி.அய். (RTI) தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
உள்கட்டமைப்பில் பாரபட்சம்:
ஓசூர் புறக்கணிப்பு ஏன்?
ஒருபுறம் வடமாநிலங்களில் தேவையற்ற இடங்களில் விமான நிலையங்களை அமைத்து நிதியை வீணடிக்கும் ஒன்றிய அரசு, மறுபுறம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஓசூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தயாராக இருந்தும், பெங்களூரு விமான நிலைய ஒப்பந்தத்தைக் காரணம் காட்டியும், பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற பெயரிலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறைந்த ஓசூரின் வளர்ச்சியை முடக்குவது, ஒன்றிய அரசின் ‘மாற்றாந்தாய் மனப்பான்மையை’ வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கேள்விக்குறியாகும்
‘இரட்டை என்ஜின்’ வளர்ச்சி
முறையான கள ஆய்வு இன்றி, வெறும் தேர்தல் விளம்பரங்களுக்காகவும், குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவும் அவசர கதியில் விமான நிலையங்களைத் திறந்து வைப்பது பொருளாதாரச் சீரழிவிற்கே வழிவகுக்கும். உத்தரப் பிரதேசத்தின் மூடிய விமான நிலையங்கள் பாஜ-வின் “திட்டமிடல் இல்லாத நிர்வாகத்திற்கு” ஒரு சான்றாகும்.
தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக உத்தரப் பிரதேச பீகார் மக்களை ஏமாற்ற விமான நிலையங்கள் போன்றவை அறிவித்து அவசரகதியில் திறந்துவைத்து யாருக்கும் பயணின்றி மக்களின் வரிப்பணம் வீனானது இதை விடுத்து மக்கள் தேவை மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களைச் செயல்படுத்துவதே உண்மையான வளர்ச்சியாகும்.
