
திருச்சி, மார்ச் 12- திருச்சிராப் பள்ளி, தேசிய மாணவர் படை (என்சிசி) குழு தலைமையகம் சார்பில் நடைபெற்ற விழாவில், சிறந்த முறையில் பணியாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் பி.கமலேஷ் கண்ணன், உயரிய விருதைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி 3ஆவது வான்படைப் பிரிவு (தமிழ்நாடு) தேசிய மாணவர் படையில் இளநிலை படை வீரராகப் (Flight Cadet) பயிற்சி பெற்று வரும் மாணவர் கமலேஷ் கண்ணன், 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியில் காட்டிய அபார ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சீரிய செயல்பாட்டிற்காக ‘சிறப்புமிகு மாணவர் சான்றிதழ்’ மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
“தேசமே முதன்மை – எப்போதும், எந்நேரமும்” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில், தேசிய மாணவர் படையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை படைப்பிரிவுத் தளபதி கர்னல்.விஜயகுமார் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர் கமலேஷ் கண்ணனை, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணித் தோழர்கள் மற்றும் சக மாணவர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
