ஆளுநர் ரவி பதவி நீட்டிப்பது ஜனநாயக விரோதம் காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்

Viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.12- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும், மக்கள் நலனுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க ஒன்றிய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 13 மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கி வைத்திருக்கிறார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மக்களின் குரலாக ஒலிப்பது சட்டமன்றம் தானே தவிர, ஆளுநரின் மாளிகை அல்ல.

சமீபத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் பேசிய பேச்சுகள் அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. இது குறித்து அவர் பேசும் போது, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது. எனவே, அது செத்துப் போன சட்டம் என்று புதிய வியாக்யானத்தை ஆணவத்தின் உச்சியிலிருந்து வழங்கியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், சர்க்காரியா ஆணைய பரிந்துரைகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறும் ஆளுநர் ஒருநாள் கூட அந்த பொறுப்பில் அமர்வது ஜனநாயக விரோதச் செயலாகவே இருக்க முடியும். இதை இனியும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *