சென்னை, மார்ச் 11 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுத்தாலும், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் சேர முடியாது.
இருப்பினும் அவர்களில் சிலருக்கு விதிவிலக்கும் இருக்கிறது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் யாரெல்லாம் சேர முடியாது? என்றால் ஒரே வீட்டில் இரு பெண்கள் ஒரே குடும்ப அட்டை வைத்து விண்ணப்பிக்க முடியாது.
தற்போது அரசு ஊழியர்களாக இருப்பவர்கள், அவர்களின் குடும்பத்தினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது.
அதேநேரத்தில், ஓய்வூதியதாரர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப் பிக்க முடியாது என்றாலும், இவர்களில் சிலருக்கு விதிவிலக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது.
அதாவது, ஒரு குடும்பத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியாது. ஆனால், அந்த குடும்பத்தில் தகுதியான பெண்கள் இருப்பின் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். அது தொடர்பான விதிமுறையை தெரிந்து கொள்வது அவசியம்.
அதாவது ஓய்வூதியம் ஆண்டுக்கு 2.50 லட்சத்துக் கும் அதிகமாக பெறுபவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
2.50 லட்சத்துக்கும் குறைவாக ஒருவர் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால் அவர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியும். அவருடைய வீட்டில் தகுதியான பெண்கள் இருப்பின் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்ட கடைநிலை அரசுப் பணிகளில் பணியாற்றி குறைவான ஓய்வூ தியம் பெறும் குடும்பத்தினருக்கு இந்த வாய்ப்பை அரசு கொடுத்திருக்கிறது.
இந்த அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மற்ற விதிமுறைகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மற்ற விதிமுறைகள் என்றால் சொந்த பயன்பாட்டுக்காக கார் வைத்திருக்கக்கூடாது, வருமானவரி தாக்கல் செய்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பலருக்கும் தெரியாத காரணத்தால், கடைநிலை அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் குடும்பத்தினர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
எனவே, தகவல் தெரிந்தவர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் குறைவாக அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு தெரியப்படுத்துங்கள்.
