பொப்பிலி அரசர் நினைவுநாள் (10.03.1978)
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ரங்கா ராவ் எனும் இயற்பெயர் கொண்ட பொப்பிலி அரசர் – அனைவருக்குமான சமூக நீதியைக் கோரி தொடங்கப் பட்ட நீதிக்கட்சி யின் தலைவர்களுள் ஒருவர். 1946-1951இல் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் பல ஆண்டுகள் அரசியலி லிருந்து ஓய்வு பெற்றார். பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டம் என்னும் சுயமரியாதை சமதர்மக் கட்சியின் வேலைத்திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டமாக்கினார்.
சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் எல்லா அரசுத் துறை வேலைகளிலும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆதித்திராவிடர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் தனித்தனி இடஒதுக்கீடு தரவேண்டும் எனக்கோரி, 1935இல் அதைப் பெற்றுத் தந்தார். அவரது மறைவு நாள் இன்று.
திருக்குறளைப் போற்றிய
எல்லீஸ் துரை நினைவுநாள் (10.03.1819)
தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்து அதன் பெருமையை உலகிற்கு எடுத்துச்சொல்லி சிறந்த மொழி பெயர்ப்பாளராக திகழ்ந்தார். மதுரையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது தனது சொந்தச் செலவில் பல கிணறுகளை வெட்டினார். இன்றும் இவரது பெயரில் மதுரையில் எல்லீஸ் நகர், எல்லீஸ் கிணறு மதுரையில் உள்ளது.
திருவள்ளுவர் உருவத்தை தங்க நாணயத்தில் அச்சிட்டு வெளியிட கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார். : திருக்குறளின் ‘அறத்துப்பால்’ பகுதியை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1812-இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (Fort St. George College) நிறுவி, அங்குக் கல்விச் சங்கத்தை உருவாக்கினார்.
சென்னையிலும் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க 27 கிணறுகளை வெட்டினார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் கிணற்றில் இவர் பொறித்த தமிழ்க் கல்வெட்டுப் பாடல் இன்றும் உள்ளது. அவரது நினைவு நாள் இன்று.
