சென்னை, மார்ச்.6 சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகினார். இதையெடுத்து, மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம்
மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி. ஆனந்த போஸ். முதலமைச்சர் மம்தாவுக்கும், ஆனந்த போஸுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று (5.3.2026) டில்லி சென்ற ஆளுநர் ஆனந்த போஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்துத் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஆளுநரின் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
“ஆளுநர் ஆனந்த போஸின் பதவி விலகலுக்கான காரணம் தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக, தமிழ்நாடு ஆளுந ராக உள்ள ஆர்.என். ரவி நியமனம் செய்யப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் இப்போது தான் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மாண்பைச் சீர்குலைப்பதோடு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதாக உள்ளன. மாநிலங்களின் கவுரவத்தைச் சீர்குலைக்கும் தன்னிச்சையான முடிவுகளில் இருந்து ஒன்றிய அரசு விலகியிருக்க வேண்டும்.” இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப் படுவதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரள மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆட்டம் போட்ட ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்! கேரள மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக நியமனம்
Leave a Comment
