தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இனி கல்வி சாரா நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளைப் பள்ளிகளில் ஊக்குவிப்பதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அது குறித்து தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் இந்த புதிய விதிகளின்படி, பின்வரும் நிகழ்வுகளுக்குக் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன:
மாணவர்களிடையே அரசியல் ரீதியான அல்லது மதம் சார்ந்த பிரிவினையைத் தூண்டும் வகையிலான எந்தவொரு கூட்டங்களோ, நிகழ்வுகளோ பள்ளி வளாகத்திற்குள் நடைபெறக் கூடாது.
கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாத எந்தவொரு தனியார் நிகழ்ச்சிகளுக்கும் பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
ஜாதி, மதம், மொழி அல்லது இனம் சார்ந்த பாகுபாடுகளை வளர்க்கும் விதமாக மாணவர்கள் அல்லது ஆசிரியர்களைத் திரட்டக் கூடாது.
விளையாட்டு மைதானம் போன்றவற்றை வணிக ரீதியான அல்லது கல்வி சாராத பிற நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது இனி விதிகளுக்குப் புறம்பானதாகக் கருதப்படும்.
பள்ளி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி எல்லாம் இனி நடத்த முடியாது.
சமீபகாலமாக சில தனியார் பள்ளிகளில் கல்விக்குத் தொடர்பில்லாத ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் அரசியல் சார்புடைய நிகழ்வுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது மாணவர்களின் கல்விச் சூழலைப் பாதிப்பதோடு, அவர்களிடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கும் ஒரு நிலைப்பட்டது.
இதனை முறைப்படுத்தவே தமிழ்நாடு அரசு இந்த விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
இந்த விதிகளை மீறிச் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
பள்ளிக் கல்வி என்பது மாணவர்களின் அறிவுத் தேடலுக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், சமத்துவமான கல்விச் சூழலை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபகாலமாக ஹிந்துத்துவ அமைப்புகள் வட இந்தியாவிலிருந்து பிரமுகர்களை அழைத்துவந்து பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துவது, ‘ஊக்க வகுப்பு’, ‘ஆன்மிக வகுப்பு’ என்ற பெயரில் ஹிந்துத்துவ மதம் சார்ந்த செயல்பாடுகளை நடத்துவது –
‘அறிவுசார் நிகழ்ச்சி’ என்ற பெயரில் அரசின் திட்டங்களுக்கு எதிராக மாணவர்களிடையே பேசுவது போன்றவை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் நாமக்கல் மாவட்ட நடுநிலைப்பள்ளியில் ‘ஊக்கச்சொற்பொழிவாளர்’ என்ற பெயரில் வந்த ஒரு பெண்மணி ‘‘அரசின் ரூ.5,000 வாங்குவது யாருக்கெல்லாம் வெட்கமாக உள்ளது அவர்கள் எல்லாம் கைதூக்குங்கள்’’ என்று கூறி, கைதூக்கிய சிறுமிகளை ‘‘நீங்கள் பாரதத்தின் சிறந்த எதிர்காலம்’’ என்று பாராட்டினார். இது சமூகவலைதளங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது. அந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் இதுபற்றிக் கூறும் போது ‘‘அவர் இப்படிப் பேசுவார் என்று எங்களுக்குத் தெரியாது’’ என்று விளக்கம் கொடுத்தார்.
அதே பள்ளியில் ‘காலை உணவுத் திட்டம்’ உட்பட பல நலத்திட்டங்கள் செயல்பட்டு வரும்போது ரூ.5,000 கொடுத்ததை மட்டும் குறிப்பிட்டுப் பேசுவது என்பது மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை திட்டமிட்டு உருவாக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடந்த ஆண்டு சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ‘ஆன்மிக சொற் பொழிவாளர்’ என்ற பெயரில் வந்த போதைச்சாமியார் ஒருவர் ‘‘உடற்குறைபாடுகளோடு பிறப்பவர்கள் பாவம் செய்தவர்கள்’’ என்று சற்றும் நாகரிகமின்றி, மனிதாபிமானமின்றிக் கூறினார். பள்ளியில் பல மாற்றுத் திறனாளிகள் இருக்கும் போதே இவ்வாறு பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. உடனடியாக ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் மேடையிலேயே இதைக் கண்டித்தார். இது தொடர்பாக கல்வி அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற பேச்சுக்களால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும், மதவாத மற்றும் இனவாத நடவடிக்கைகள் இடம் பெறுவதை தடுக்க, தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பும், கட்டளையும் வரவேற்கத்தக்கதாகும்.
மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டக் கூடியதாகும்.
