சென்னை, மார்ச்.6 வரும் தேர்தலைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஒரு வலுவான மற்றும் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் என மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒத்த கருத்துடைய கட்சிகள்: சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM), ம.தி.மு.க. மற்றும் அய்.யூ.எம்.எல். (IUML) போன்ற முக்கியக் கட்சிகள் வழக்கம் போலத் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. புதிய வரவுகள்: பல்வேறு சிறிய அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் பா.ஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக ஒன்றிணைய தி.மு.க.வின் இந்த மெகா கூட்டணியில் கரம் கோர்த்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்தால்
கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா தயாராக இருந்தும் இந்தியா தயக்கம்
புதுடில்லி, மார்ச் 6 இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அய்ரோப்பிய நாடுகள் நிறுத்தின. இருப்பினும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயைப் பெற்று வந்தது. இது உக்ரைன் போரில் ரஷ்யாவை ஊக்குவிப்பதாக அமையும் எனக் கூறி, அமெரிக்கா (டிரம்ப் நிர்வாகம்) இந்தியாவுக்குக் கூடுதல் வரி விதிப்பதாக எச்சரித்தது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டது. ஒருவேளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் வாங்குவது கண்டறியப்பட்டால், அமெரிக்கா மீண்டும் 25 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளதால் பன்னாட்டு அளவில் பதற்றம் ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெயை விநியோகிக்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று (5.3.2026) அளித்த பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார்.
கேளம்பாக்கம் ஊராட்சியில் மானிய விலையில் 300 பெண்களுக்கு ஆட்டோ
சென்னை, மார்ச்.6 படூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்த ரேசன் கடை திறப்பு விழா நேற்று (5.3.2026) நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் ஆகியோர் பங்கேற்று, புதிய ரேசன் கடையைத் திறந்து வைத்து மக்களுக்குப் பொருட்களை வழங்கினர். இதேபோல், பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சியிலும் புதிய ரேசன் கடை திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திட்டத்தின் மூலம் மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நேற்று (5.3.2026) நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று, 300 பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்களையும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ விருதுகளையும் வழங்கினார்.
அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற யு-25 (U-25) இளையோர் கிரிக்கெட் கோப்பை பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
