திருப்பூர், மார்ச் 5- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குமரிக் கல்பாைளயம் கிராமத்தில் இந்தியாவிலேயே உயரமான 27 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்ட இடம் அருகே, இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது!
குமரிக் கல்பாைளயத்தில் உயரமான 27 அடி உயர நடுகல்
சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானதும், நாட்டிலேயே மிக உயரமானதுமான 27 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நடுகல் அமைந்துள்ள பகுதியை அகழ்வாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரலாற்று ஆய்வாளர்களும் கிராம மக்களும் கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் 736 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
மேலும், கடந்த ஆண்டு மே மாதத்தில் 7 நாட்கள் சிறப்பு காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்றது. இதன்பின், அத்திக்கடவு – அவிநாசி திட்டப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர், ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இது தொடர்பாக மனு அளித்தனர்.
அகழாய்வுப் பணி தொடக்கம்
இந்த 27 அடி உயர நடுகல் அருகே ஏற்கெனவே இரும்புத் தாதுக்கள், முதுமக்கள் தாழி, பானைகள், பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதனால் இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என ‘குமரிக்கல் தொல்லியல் பாதுகாப்புச் சங்கம்’ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது ஒன்றிய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரவாழி தலைமையில், 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நடுகல்லில் இருந்து சுமார் 100 – 150 மீட்டர் தொலைவிற்குள் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கண்டறியப்படும் ரோமானிய வர்த்தக ஆதாரங்கள், மட்பாண்டத் துண்டுகள் மற்றும் இரும்புத் தாதுக்களை ஆய்வு செய்யத் திட்ட மிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரவாழி கூறும்போது:
“ஈரோடு மாவட்டம் கொடுமணலில் இருந்து வெறும் 15-20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி, ரோமானிய வர்த்தகத்திற்கான வலுவான சான்றுகளை வெளிப் படுத்தும். இந்த ஆய்வின் மூலம் பெருங்கற்காலம் மற்றும் வரலாற்று காலத்திற்கான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆய்வின் முடிவில், இப்பகுதியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கத் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.” தற்போது குமரிக் கல்பாைளயத்தில் அகழாய்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.
