மதுரை, மார்ச் 5- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து செயல்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து 80 சதவீதம் பேர் விரைவில் திமுகவில் சேர்வார்கள் என்று பேட்டி அளித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் பகுதியில், வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று (4.3.2026) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் மார்ச் 7ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரைத் திரட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டின் போது அ.தி.மு.க.விலிருந்து சுமார் 80 சதவீதத்தினர் தன்னுடன் இணைந்து திமுகவில் சேருவார்கள் என அதிர்ச்சியளித்துள்ளார்.
கடந்த அய்ந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், அடித்தள மக்களின் தேவைகளை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாக ஓபிஎஸ் புகழ்ந்து பேசினார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ஓபிஎஸ் கணித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுகவிற்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது தென் மாவட்டத் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
