மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசனை, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தடுத்து நிறுத்திய ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் முக்கியப் பாதையில் வானதி சீனிவாசன் நுழைய முயன்றபோது, அங்கே பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவரைத் தடுத்து நிறுத்தினார்.
‘‘இது வி.அய்.பி-களுக்கான பாதை, இங்கே செல்ல அனுமதி இல்லை’’ என அவர் கூறியுள்ளார்.
அதற்கு வானதி ‘தான் ஒரு தமிழ்நாடு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய பிஜேபி மகளிர் அணித் தலைவர் என்பதைச் சுட்டிக்காட்டியும் அமைச்சர் தொடர்ந்து தடுத்ததால், வானதி சீனிவாசன் அவரது கையைத் தட்டிவிட்டு மேடைக்குச் சென்றார். (அதுவரையில் பாராட்ட வேண்டியதுதான்!)
இந்த நிகழ்வு குறித்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்:
“பெண்கள் எவ்வளவு உயரிய பதவியில் இருந் தாலும், பாஜக-வில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை” என்பதுதான் இந்த விமர்சனம்.
நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. “அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால், ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரின் நிலை என்ன?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு பெண் தலைவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்படும்போது, அங்கு தொடர்ந்து நீடிப்பது அவரது சுயமரியாதைக்கு உகந்ததா? என்ற விவாதங்களும் கிளம்பியுள்ளன.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது குறித்து வானதி சீனிவாசன் தரப்பிலிருந்தோ அல்லது பா.ஜ.க. மேலிடத்திலிருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வானதி சீனிவாசன் போன்றவர்கள் பிஜேபி என்பது என்ன? அவர்கள் கூறும் ஹிந்துத்வாவின் தன்மை என்பது எத்தகையது என்பதை இப்பொழு தாவது உணர்ந்து புத்தி தெளிவார்களா? என்பது அவசியமான கேள்வியாகும்.
இந்து மதத்தின் வேதங்களுக்கு ஸ்மிருதிகளும் பெண்களை எவ்வளவுக் கீழ்த்தரமாக மிதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினால் வானதி சீனிவாசன், தமிழிசை போன்றவர்கள் ஆவேசமாக எதிர்க் குரல் கொடுக்கத் தயாராகி விடுவார்கள்.
திரைமறைவில் ஆர்.எஸ்.எஸ். பிஜபிக்காகக் காய் நகர்த்தும். வாரா வாரம் ஆலகால நஞ்சை உமிழ்ந்து கொண்டிருக்கும் ‘துக்ளக்’ குருமூர்த்தி ‘இப்போதுள்ள பெண்களில் 30 சதவீதம் பேர் தான் பெண்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்’ என்று பேசினாரே!
அப்போதுகூட வானதி சீனிவாசன்கள் வாயைத் திறக்கவில்லை; அவர்களுக்கும் சேர்த்து நாம்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.
சிந்திப்பார்களாக!
