திருப்பதி, மார்ச் 5 ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
கருநாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த மோகன் தாஸ் (வயது 71), நாகராஜு ராவ் (வயது 61), குசுமா (வயது 61), ஜெயந்தி (வயது 59), பூஜா (வயது 33) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று (4.3.2026) அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பலமனேர் அருகே உள்ள கங்காவரம் மண்டலம் தண்டபல்லி கிராஸ் எனும் இடத்தில், அதிவேகமாக வந்த கார், சிமெண்ட் லோடுடன் கர்னூல் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு கங்காவரம் காவல்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர், காரில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கங்காவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
