சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கான என்னுடைய கனவு என்பது, தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் எல்லா எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுதான் என்னுடைய கனவு! நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழர்கள் காணத் தொடங்கிய கனவு! அதை நோக்கிய எங்களின் பயணத்தில் கடந்த 5 ஆண்டுகள் என்பது பெரும் பாய்ச்சலை கண்டிருக்கிறது. துறைகளி லும் ஆல்-ரவுண்டராக உயர்ந்து இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டிலுள்ள எல்லா வட்டாரத்திலும் புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் டைடல் பார்க் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டாம் நிலை மாநகரங்களில் கூட நியோ டைடல் பார்க், எல்காட் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், காலை உணவுத் திட்டம், தோழி விடுதிகள் என நிறைய இருக்கிறது. என்னால் உறுதியாக சொல்ல முடியும், இத்தனை முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு இந்தியாவிலேயே நிச்சயமாக இருக்க முடியாது.
ஒன்றிய அரசு உதவியில்லாமல் சாதித்து அசத்தல்
நாங்கள் இப்படி ஆல் –- ரவுண்டர் ஆக அடித்து ஆடுவதால்தான், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய பா.ஜ.க. அரசே பாரட்டி சொல்லியிருக்கிறது. நம்பர் ஒன் மாநிலம் மட்டுமல்ல, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ‘One and Only’ மாநிலமும் நம்முடைய தமிழ்நாடுதான். இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், அதாவது டபுள் எஞ்சின் என்று அவர்கள் சொல்லும் டப்பா எஞ்சின் ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? முடியவே முடியாது! அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம். இதற்கு அப்படியே நேர்மாறான, முற்போக்கு அரசு எங்கள் திராவிட மாடல் அரசு.முக்கியமாக நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டியது, நாங்கள் செய்த சாதனைகளையெல்லாம் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம்.
பொய்யைப் பேசும் பிரதமர் மோடி
மதுரை வந்த பிரதமர் மோடி, மதுரவாயல் துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க.தான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தார்கள். வழக்கிலும் வாதாடினார்கள். இந்த பணிகள் நாங்கள் வந்து, இந்த ஒன்றிய அரசிடம் சொல்லி இப்போதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.தி.மு.க. ஆட்சி என்றால் வளர்ச்சி! வளர்ச்சி என்றால் தி.மு.க. ஆட்சி! என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பிரதமர் மோடி அவர்களுக்கு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
இதை விட பெரிய காமெடியும் நேற்று மேடையில் அவர்கள் பேசும் போது நடந்தது. என்னவென்றால், பழனிசாமி அவர்கள் ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடி அவர்கள் ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல்தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது.
தமிழ்நாடு அணியா,
டில்லி அணியா.?
அதனால்தான், நான் என்னுடைய பிரசாரத்தை தொடங்கியபோதே இந்த தேர்தல் ‘Tamil Nadu Vs NDA’ என்று தெளிவாக சொன்னேன். இதை நான் சொன்னபோது சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும் நான் சொன்னதை உறுதிப்படுத்தி செல்கிறார்கள். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்! அந்த திராவிட மாடல் 2.0-வில் எங்கள் ரெக்கார்டை நாங்களே பீட் (Beat) செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
