‘நூலைப்படி, நூலைப்படி’ என்ற நமது புரட்சிக் கவிஞர் ‘தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள்’ என்பதை வலியுறுத்தி, ‘காலையில் படி, கடும்பகல் படி, படி’ – என்று கவிதை நயத்தோடு கூறிய ஆணைக்கு இணங்கவும், கடுமையான பல கடமையாற்றும் பணிகளுக்கு இடையில், இளைப்பாற்றிக் கொள்ள – வள்ளலார் தந்த அருமையான உவமைப்படி ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே, தரு நிழலே’ என்பதற்கொப்பவும் –
கிடைக்கும் கால இடைவெளியில் தோழர் களும், அன்பர்களும், நலம் விரும்பிகளும் தரும் நூல்களையும் பல ஏடுகளில் வரும் சிறந்த மதிப்புரையில் பயனுறு, வியனுறு, நூல்களைப் பற்றி அறிந்து, அவற்றை வாங்கியும், நாளும் வரும் அறிவுத் தேனை அள்ளிப் பருகிடப் போதிய நேரமும், வைத்துக் கொள்ள இல்லத்தில் இடமும் இல்லை.

இத்தனைக்கும் பல நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பல நூலகங்களுக்கும் தந்து கொண்டே உள்ள நிலையிலும் – வருவன, படிப்பன, செல்வன என்று எண்ணிக்கையை நாளும் அதிகப்படுத்தி வருகின்ற (சில, பல நூல்களை எனது எழுத்துக்கும், பேச்சுக்கும் – சான்றாவணங்களை எடுத்துக்காட்ட எப்போதும் என்னிடமே வைத்துக் கொள்வேன்) ஒரு தேவை ஏற்படுவதால் – இடத்தையும், படிக்க நேரத்தையும் ‘வேட்டையாடும்’ நிலை எனக்குத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது! அதனால்தான் படித்ததை வாசகநேயர்களான உங்களிடம் பகிர்ந்து மகிழும் வாய்ப்பு அருகி வரும் ‘‘நெருக்கடி’’ எனக்கு ஏற்படுகிறது.

‘‘என்ன, ‘வாழ்வியல் சிந்தனை’கள் கொஞ்ச காலமாக ஆசிரியரிடமிருந்து வரவே இல்லையே?’’ என்ற ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்க்கும் நமது வாசக நேயத் தோழர்களின் குரல் என் காதுகளில் விழாமல் இல்லை.
பயணங்களில் – பயணிக்கும் கார், வேன், ரயில் – முதலியவற்றில் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, ‘நவில்தொறும் நூல் நயம்’ இன்பத்தை அனுபவித்து மகிழ்கிறேன்.

கடந்த 2, 3 மாதங்களாக, நல்ல நல்ல புத்தகங்கள் கிடைத்ததை – அன்றாடப் பணிகளுக் கிடையிலும் வாசிக்கவும், சுவாசிக்கவும் என்னால் முடிவதால், களைப்புக்கும் சோர்வுக்கும் விடை கொடுத்து, புத்தகப் பூங்காவில் வீசும் மெல்லிய பூங்காற்றை நாளும் சுவாசித்து, சுவாசித்து… ஊக்கமும் உற்சாகமும் கொள்ள முடிகிறது.
ஹூவாங் போ–ரியம் (Hwang Bo-Reum) என்ற தென் கொரிய பெண் எழுத்தாளரின் ‘Every Day I Read’ என்ற ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், சிறு சிறு அத்தியாயங்களில் பல தலைப்புகளில் வாசிப்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கான வினா – விடைப் புத்தகம் போல உள்ளது.
ஏற்ெகனவே இதுபற்றி ‘வாழ்வியல் சிந்தனை களில்’ முன்பே எழுதியுள்ளேன் – முழுக்கப் படித்து சுவைத்து, சுவாசித்த பிறகு கொள்ளை மகிழ்ச்சி!
அண்மையில் அமெரிக்காவில் வெளியிடப் பட்டு எனக்கு அன்புடன் அனுப்பிய
‘‘What Tree Are You?’’
‘Akila Selvaraj’ எழுதிய அருமையான அனுபவத்தில் கனிந்து வடித்தெடுத்த ஓர் ஆங்கில நூல். ஒரு புதுமையான அணுகுமுறையுடன் எழுதப்பட்ட நூல் – படித்தேன் (விரிவாகப் பிறகு எழுதுவேன்).
சிறந்த முற்போக்கு, கொள்கை எழுத்தாளரான தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் எழுதிய ‘கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு’ என்ற தமிழ் நூல் (இரண்டாம் பதிப்பு) பல அரிய தகவல்களுடன், மறுக்க இயலாத தருக்க ரீதியான கருத்துக் கோவையாக வந்துள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் உரையாற்றச் சென்றபோது, அங்கே என்னைச் சந்தித்த தோழர் புகழேந்தி மூலம் ‘சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்’ வெளியிட்ட மிக அருமையான, ‘ராம் தங்கம்’ எழுதிய அரிய ஆதாரங்களின் தொகுப்பாக ‘கோயில் நுழைவுப் போராட்டம்’ என்ற நூல் கிடைத்தது. (ராம் தங்கம் அரும்பாடுபட்டு தகவல்களைத் திரட்டிய 624 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக வெளி வந்துள்ளது). இந்நூல் ஆய்வாளர்களுக்குப் பேச்சாளர்களுக்கு மிகவும் பயன்படும் நூல்.
இது ஒரு பகுதி மட்டுமே. மேலும் பல நூல்கள் வரிசையில் நின்றுகொண்டுள்ளன. ஒவ்வொன்றைப்பற்றியும் விளக்கி எழுதுவேன் – நேரம் கிட்டும்போது.
மற்றொரு நீண்ட பட்டியலும் உண்டு!
(தொடரும்)
