சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சின்னம்மை பரவும் காலம் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
சின்னம்மை நோய்
கேரள மாநிலத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் இருந்து வெப்பமான பருவம் மாறும்போது, சின்னம்மை பரவல் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டிலும் சின்னம்மை பரவும் காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை என்பதால், இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எப்படிப் பரவுகிறது
சின்னம்மை என்பது எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று நோயாகும். இது கீழ்க்கண்ட வழிகளில் பரவுகிறது:பாதிக்கப்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிவரும் காற்றுத் துளிகள் மூலம்.கொப்புளங்களில் இருந்து வரும் திரவத்தைத் தொடுவதன் மூலம், அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதன் மூலம் பரவும்.
லேசான காய்ச்சல், சோர்வு மற்றும் தளர்ச்சி, பசியின்மை, உடலில் சிறிய நீர்த்திவலைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி உடல் முழுவதும் பரவும். ஓரிரு நாட்களில் கொப்புளங்கள் வெடித்து, பின்னர் காய்ந்து விடும்.
இந்த நோய் பொதுவாகக் குழந்தைகளுக்குச் சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும். இருப்பினும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குப் பாதிப்பு கூடுதலாக இருக்கலாம்.
தடுப்பு முறைகள்
பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் அனைத்துக் கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை (7-10 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் மற்றும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளைக் கிருமிநாசினி அல்லது சுடு தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும். நோய் பாதிப்புள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முழுமையாகக் குணமடைந்த பிறகே அனுப்ப வேண்டும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.சின்னம்மை குறித்த கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற 24 மணிநேர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
