சென்னை, மார்ச் 2– தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (1.3.2026) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மோடியை ஏற்க மாட்டார்கள்
சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையில் எடுப்பதும், மதக்கலவரங்களைத் தூண்டுவதுமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நோக்கம் எனச் சாடிய கு.செல்வப்பெருந்தகை, மக்கள் அமைதியாக வாழ்வதை அவர்கள் விரும்புவதில்லை என்றும், அதன் முகமாகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமரின் ஆன்மிகப் பயணங்கள் குறித்துப் பேசிய அவர்: “பிரதமர் மோடி நூறு முறை தமிழ்நாடு வந்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்றாலும், அவர் செய்த செயல்களுக்காக முருகப்பெருமான் அவரை மன்னிக்க மாட்டார்.”
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மண் பாஜகவுக்கு உகந்த நிலம் அல்ல என்றார். மேலும், தமிழ்நாடு மக்களால் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்ட பாஜக, தற்போது அதிமுக எனும் முகமூடியை அணிந்து கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை டில்லியில் அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் பாஜகவும், அதிமுகவும் காலூன்ற ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று கு.செல்வப்பெருந்தகை இந்தச் சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்தார்.
