தமிழ்நாடு வரலாற்றில் ஆகஸ்ட் 14, 2021 என்பது வெறும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த 100ஆவது நாள் ஆட்சி கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஆயிரம் காலத்துச் சமூக ஏற்றத்தாழ்வைச் சரிசெய்த ஒரு வரலாற்றுப் புரட்சி. அன்றுதான், “அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தந்தை பெரியாரின் கனவு: கருவறைத் தீண்டாமை ஒழிப்பு
தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்பிற்காகப் போராடியவர். “மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது என்பது வெளியே இருக்கும் தீண்டாமை; ஆனால், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர மற்றவர்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது என்பது கடவுளின் பெயரால் நடக்கும் கருவறைத் தீண்டாமை” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
1970-களில் “பாப்பனரல்லாதார் அர்ச்சகர் ஆக வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட் டங்களை அறிவித்தார். கடைசி மூச்சு இருக்கும் வரை இதற்காகக் குரல் கொடுத்தார். ஆனால், அந்த உரிமை சட்டம் ஆவதற்கு முன்பே அவர் மறைந்தார்.
இதனைத்தான் கலைஞர், “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமலே அவரைப் புதைக்கிறோம்” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
கலைஞரின் விடாமுயற்சி:
முள் அகற்ற எடுத்த முயற்சிகள்
தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அந்த ‘முள்ளை’ அகற்ற 1970லேயே கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். ஆனால், நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அத்திட்டம் நீண்ட காலம் முடங்கியது. 2006இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், இதற்காகப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கி, அனைத்துச் ஜாதி மாணவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்தார். எனினும், அந்தப் பயிற்சி பெற்ற மாணவர்கள் பணிக்குச் சேர முடியாதபடி சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன. கலைஞர் தனது இறுதிக் காலம் வரை அந்த முள்ளை அகற்றத் துடித்துக் கொண்டிருந்தார்.
தனயன் மு.க. ஸ்டாலின்: முள்ளை முற்றிலுமாக அகற்றிய வரலாற்றுத் தருணம்
2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞ ரின் கனவை நனவாக்குவதைத் தனது முதன்மைக் கடமையாகக் கொண்டார்.
திராவிட மாடல் அரசின் 100ஆவது நாள் (ஆகஸ்ட் 14, 2021): சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பயிற்சி பெற்ற 24 பார்ப்பன ரல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பணி ஆணையை வழங்கினார்.
இதில் 5 பேர் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் ‘ஓதுவாராக’ நியமிக்கப்பட்டதும் இந்த ஆட்சியில்தான்.
இந்த நடவடிக்கையின் மூலம், “அறிவியல் ரீதியாக மனிதர்கள் சமம் என்று பேசும் நாம், ஆன்மீக ரீதியாகவும் அனைவரும் சமம்” என்பதை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உலகிற்கு நிரூபித்தார்.
“பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை என் தந்தை (கலைஞர்) அகற்றத் தொடங்கினார், அதை இன்று நான் முழுமையாக அகற்றிவிட்டேன்” என்ற ரீதியிலான அவரது செயல் பாடு, திராவிட இயக்கத்தின் 100 கால போராட்டத்திற்குப் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது
பெரியார் விதைத்த விதை, கலைஞரால் செடியாக வளர்க்கப்பட்டு, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் சமத்துவக் கனியாகக் கனிந்துள்ளது. இது வெறும் வேலைவாய்ப்பு அல்ல; பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட சமூக நீதி எனும் உரிமையை நிலைநாட்டிய புரட்சிகரமான நிகழ்வு.
