சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ஆளுநர் மளிகை) அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களின் மாநில உருவாக்க நாள் கொண்டாடப்பட்டது. ஆளுநர் தலைமையில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். இதில், “நம் நாட்டு மக்களிடையே பல்வேறு வேற்றுமைகள் உள்ளன. மதம், இனம், நிறம், மொழி மற்றும் கலாச்சாரம் என பல்வேறு வேற்றுமைகள் இருந்த போதிலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். இது தான் நம்மை இந்த உலகத்தில் தனித்துவமாகக் காட்டுகிறது.
நம் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். எத்தனை மாநிலங்கள் உருவாகினாலும், “இந்தியர்” எனும் ஒற்றை குடையின் கீழ் நாம் ஒற்றுமையாக இருப்போம். தமிழ் நாட்டை பொறுத்தவரையில், இது ஒரு அழகான மாநிலம். இது கலாச்சாரம், பண்பாடு, முற்போக்குச் சிந்தனை, வளர்ச்சி என அனைத்திலும் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. தமிழ் மக்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலான கலாச் சாரத்தைப் பின்பற்றி வருகின்றனர். பழமையான கல்வி நிலையங்கள் இன்றளவும் இங்கு உள்ளன. இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டை தங்களின் சொந்த வீடு போலக் கருதுகிறார்கள்.
காரணம், தமிழ்நாட்டு மக்கள் அந்த அளவிற்கு அன்பும், விருந்தோம்பல் குணமும் கொண்டவர்களாக இருப்பது தான். வட மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இது இந்தியாவின் டில்லி உள்ளிட்ட வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பயிலும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இரவில் வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். தமிழ் நாட்டின் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.
தமிழ் நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசி யுள்ளார். தமிழ்நாட்டில் அமைதி தவழ்கிறது. அழகு குலுங்குகிறது.
வேற்றுமைகள் பல இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கிறோம்.
இதுதான் நம்மை இந்த உலகத்தில் தனித் துவமாகக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில்தான் இந்தியாவின் பல மாநிலங்களி லிருந்தும் படிக்கும் பெண்கள் பிரச்சினையின்றி இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் நிம் மதியாக இருக்கிறார்கள் என்று பேசித் தள்ளி இருக்கிறார்.
ஆளுநர் ரவியின்வார்த்தைகள் உள்ளப் பூர்வமானதுதான் என்றால், இதற்கெல்லாம் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சிதானே காரணமாக இருக்க முடியும்.
ஆனால் எப்பொழுது பார்த்தாலும் அரசியல்வாதி போல் தி.மு.க. அரசைக் குறை கூறுவதும் – ‘சட்டமன்ற ஆளுநர் உரை’ என்ற மரபைச் கொச்சைப்படுத்துவதுமாக நடந்து கொள்கிறாரே!
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப் படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தேவையில்லாமல் காலம் கடத்தி வருகிறாரே.
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று ‘ஆரிய மாயையில் அறிஞர் அண்ணா எழுதினாரே – இது ஆர்.என். ரவிக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும் அல்லவா!
