உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொத்தக் கல்வித்துறையையே தலைகுனிய வைக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தேர்வின் முதல் நாளான ஹிந்தி மொழிப்பாடத் தேர்வில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் சரியான பதிலுக்கு ஆபாசமான கிறுக்கல்களைப் பதிலாகவும், அத்துடன் பணத்தையும் வைத்துச் சென்றது அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. சில மாணவர்கள் ஒருபடி மேலே சென்று, “ஜெய் சிறீராம்! நீ ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் என்னை வெற்றி பெறச் செய்!” என மிரட்டல் விடுத்து எழுதியிருந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு காணொலி பரவி வருகின்றது. தேர்வுக் கண்காணிப்பு அதிகாரி வெளியிட்ட காட்சிப் பதிவில், மாணவர்கள் பகிரங்கமாக கைப்பேசி (மொபைல் ஃபோன்)களைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள்களை அனுப்பி, அதற்கான விடைகளைப் பெற்றுத் தேர்வெழுதும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தேர்வு மய்யங்களுக்குள் கைப்பேசி (மொபைல் ஃபோன்)கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
அனைத்தையும் விடக் கொடுமையாக, பல தேர்வு மய்யங்களை உள்ளூர் சமூக விரோதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கண்காணிப்புப் பணியில் இருக்கும் ஆசிரியர்களை மிரட்டி வெளியேற்றும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
பெண் ஆசிரியர்களிடம், “அருகில் உள்ள மரத்தடியில் சென்று அரட்டை அடியுங்கள்.” என்றும், ஆண் ஆசிரியர்களிடம், “மதுபான விடுதிகளுக்குச் சென்று மது அருந்துவிட்டு தேர்வு முடிந்த பின் வாருங்கள்.” என்றும் மிரட்டிவிட்டு – சமூக விரோதிகளே தேர்வு அறைக்குள் நுழைந்து பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கைப்பேசி கொடுத்து ‘‘விடைகளைத் தேடி எழுதுங்கள்’’ என்றும் ‘‘தெரிந்தவர்களிடமிருந்து ‘வாட்ஸ் அப்’ மூலம் விடைகளைப் பெற்று எழுதுங்கள்’’ என்றும் கூறி 500 முதல் 5000 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.
இப்படி முறைகேடுகள் மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்கள், ‘நீட்’ (NEET) போன்ற போட்டித் தேர்வு களிலும் இத்தகைய குறுக்கு வழிகளை பிஜேபி ஆளும் வடமாநிலங்களில் பின்பற்ற மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?
13 ஆயிரம் பள்ளிப் பாட நூல்களை பழைய புத்தகக் கடைகளில் விற்றுள்ளனர். அந்தப் புத்தகக் குவியல் காட்சிகளோடு ஏடுகளில் விலாவாரிவாக செய்தி வெளி வந்துள்ளதே! அதுவும் – சாமியார் ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கும் பிஜேபி ஆளும் அதே உத்தரப்பிரதேசத்தில்தான்.
கல்வி என்பது பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் எந்த யோக்கியதையில் நாற்றமெடுத்துக் கிடக்கிறது – வியாபாரப் பொருளாக மாறியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட இந்த சங்பரிவார்க் கூட்டமும், பார்ப்பனக் கும்பலும் ‘‘இடஒதுக்கீட்டால் தகுதி– திறமை கெட்டு விட்டது’’ என்று கூவிக் கொண்டு ஒப்பாரி வைப்பதுதான்!
மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி ஆட்சியில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஊழல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ‘வியாபம் ஊழல்’ என்று சொன்னால் அனைவருக்கும் நினைவிற்கு வருமே!
‘ஆள் மாறாட்டம்’ ‘வினாத்தாள் (கசிவு) – விலைக்கு விற்பனை’ என்ற முறை கேடுகள் நடக்கவில்லையா? இந்த மோசடியில் 40 பேர் தற்கொலை செய்துகொண்டனர் – அவர்களில் ஒருவர் அம்மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் ஒருவர் என்றால், பிஜேபி ஆட்சியின் இலட்சணம் எந்த அளவு தரை தாழ்ந்த மட்டமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
இந்த யோக்கியர்கள்தான் ஊழலைப்பற்றி நீட்டி முழங்குகிறார்கள்! வெட்கக் கேடு! அசல் வெட்கக்கேடு!!
