சென்னை, பிப்.27- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டப் பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய மனு ஒன்றை அளித்தனர்.
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்
இறுதி வாக்காளர் பட்டியலில் வயது விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்றும், பகிர்ந்துகொள்ளப்படும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப் பட்டது. இதனைச் சரி செய்து சீரான பட்டியலை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வாக்காளர் விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப் படாததால், பழைய விவரங்களே தொடர்கின்றன. இதனைச் சரிசெய்யவும், புதிய வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமிக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
ஊடக விளம்பரங்களுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். சந்தேகங்களைத் தீர்க்க உயர் மட்ட குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
தேர்தல் செலவினங்கள்
மாவட்டத்திற்கு மாவட்டம் தேர்தல் செலவு விகிதங்களில் மாறு பாடுகள் உள்ளன. சந்தை விலைக்கு ஏற்ப சீரான வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
கையேடுகள்
தேர்தல் ஆணையத்தின் கையேடுகள், விதிகள் மற்றும் வழி காட்டுதல்களைத் தமிழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பான தமிழ் மொழியாக்கத்தை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தேர்தல் ஆணையக் குழுவினர் இக்கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாம் நாள் ஆய்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
