சென்னை, பிப். 26 சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
அன்றாடம் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல் பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி
தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில், “நாள்தோறும் லட்சக் கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனை யளிக்கிறது.
ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண் டும்” என்று கண்டனம் தெரிவித் திருக்கிறார்.
தமிழச்சி தங்கபாண்டியன்
தொடர்ந்து திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் வெளியிட்டிருக்கும் பதிவில், “சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மிகவும் கவலையளிக்கிறது.
நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கையான மின்சார ரயில் சேவைகளை திடீரென குறைத்தது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சேவை குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தி யிருக்கிறார்.
சு.வெங்கடேசன் எம்.பி.
புறநகர் ரயில் சேவை பாதிக்கப் பட்டு இருப்பதற்கு ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த பதிவில் அவர், “ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை ரயில்நிலைய பணிகளால் புறநகர் ரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ.734 கோடியில் புணரமைக்கப்படும் எழும்பூர் ரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
