திருச்சி, பிப். 26– “அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது, வரும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
ரூ.10 ஆயிரம் அறிவிப்பு
திருச்சி விமான நிலையத்தில் அவர் 24.2.2026 அன்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
“அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது தேர்தல் காலத்து வாக் குறுதிகள். வழக்கமான வாக்குறுதி கள்தான். தி.மு.க. ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூட இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இலவசங்கள் கூடாது என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். திமுக மகளிர் மேம்பட்டுக்காக, மாணவச் செல்வங்களை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையை வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிற அல்லது காலகாலமாக வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற, அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில், அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்றது. இதனால் ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கதக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை திமுக மேற்கொண்டு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
நிதி நெருக்கடி
கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் ஒன்றிய அரசு, மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்தும் கூட, தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி ஜிடிபியை தமிழ்நாடு அரசு உயரச் செய்து இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.
தவெக தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார்.
கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை அவருக்கு அஜெண்டாவாக உள்ளது, திமுக எதிர்ப்பு மட்டும் தான். திமுக எதிர்ப்பு என்றாலும் மாற்றுக் கருத்து இல்லை. செயல் திட்டம் என்ன, யாருக்காக கட்சி தொடங்கினார் என்று எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார் என தெரியவில்லை. இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.”
